திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கடவுளோடு ..,,

கடவுளே !
உன்னால் படைக்கப்பட்டேன் நான் எனில்
என் தாயும் தந்தையும்தானே நீ ?
என் மகவுக்கு நானுமென் மணவாட்டியும்தானே ?
எனில் ஒவ்வோர் உயிரும் நீதானே?
ஒவ்வோர் உயிரிலும் கலந்த உன்னை
பிரித்து கோயிலில் மனிதன் வைத்ததேன் ?
மனிதன் கடவுள் பாதி மிருகம் பாதி !
உன்னைப் பிரிந்தபின் மிருகம்தானே மீதி !
உன்னைக் கோயிலில் சிறை வைத்ததால்
நீ அறியாய் என மிருகம் தன் வக்கிரம் காட்ட
மிருகம் தாவர ஜங்கமமென எங்கும்
நீக்கமற நிறைந்துள்ளாய் என மறந்தான் இவன் !
ஜாதி மதம் மாச்சர்யம் பொறாமை அகங்காரமென
பலவித  விகார ஆடையணிந்தே திரிகின்றான் !
முழுதாய் நீ சிறையிலில்லை
முழுதும் நீ விலகவில்லை
முட்டாள் இவனதை உணரவில்லை
மௌனியாய் நீ ஏன் விளங்கவில்லை !

  மகனே !
மௌனியாய் நானில்லை
ஒவ்வொரு அசைவிலும் நானுண்டு;
நான் வேறு நீ வேறல்ல எனினும்
நீயும் நானும் வேறாய் ஆனோம்;
பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அணுவிலும் நானுள்ளேன்;
ஒவ்வோர் அணுவும் முழுதுமாய் நானில்லை;
ஒவ்வொன்றும் சுதந்திரம் கொண்டுள்ளன
முழுதும் நானாய் மாறிக்கொள்ள; ஆனால்
சிந்திக்கும் மனிதன் கூட எது சுதந்திரமென
அறியாமல் சிக்குண்டு தவிக்கிறான்;
எனக்கு விருப்பு வெறுப்பில்லை;
ஜாதி மதமில்லை, வர்ண பேதமில்லை;
ஆனால் அனைத்தும் உனக்குள் உண்டு;
ஏற்றங்களும் இறக்கங்களும்
உயர்வும் தாழ்வும் குற்றங்களல்ல;
இக்குணங்கள் பிரபஞ்ச இயக்க விதிகள்;
நீக்கலும் நீங்கலும் நீயுணர்ந்து நடந்தால்
உன்பாதை எனைநோக்கி;
அப்பொழுது நீயும் மௌனியாவாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக