திங்கள், 11 ஆகஸ்ட், 2014

எது சுதந்திரம்?

எது சுதந்திரம்?
          நீ .,,,,,,,,,,,,,
         எதைப் படிக்க வேண்டும்
     எப்படி வேலை செய்ய வேண்டும்
     எதைச் சாப்பிட வேண்டும்
     எங்கு சாப்பிட வேண்டும்
     
     எதை விதைக்க வேண்டும்
     எப்படி அறுவடை செய்ய வேண்டும்
எங்கு விற்க வேண்டும்
எதை வாங்க வேண்டும்
எவருக்கு விற்க வேண்டும்

எப்படி உனது வாழ்க்கை இருக்க வேண்டும்
          எல்லாமே யாரோ ஒருவன் சிந்தித்ததாய் இருக்க
எவன் சொன்னான் சுதந்திரம் கிடைத்துவிட்டதென்று ???
 
 
 
 
 
 
 
 
இரண்டு பெட்ரூம் வீடு, ஒரு கார்,
டிவி பிரிட்ஜ் என சகலமும் இருந்து
காலை முதல் இரவு வரை
யாரோ ஒருவன் பணம் குவிக்க மாடாய் உழைத்து
ஐந்திலக்க சம்பளம் என பெருமை கொண்டு
வீடு திரும்பியபின் அப்பா; அம்மா என்ற
அமுதக் குரலை அலட்சியப்படுத்தி
அதீத அசதியோடு படுக்கையில் வீழ
அழுத குழந்தை ஆயா மடியில் அணைந்துறங்க
வாழ்க்கைத் தரம் இதுவென உலக வங்கி நிர்ணயிக்க
வளர்ச்சியடைந்து விட்டோமென அரசு பெருமை கொள்ள
வெட்கமாய் இல்லை நாம் சுதந்திரமாய் இருப்பதாய் சொல்லிக் கொள்ள?
 
 
 
 
 
 
 
 
அன்று....
சேவல் கூவும் நேரம் கண்விழித்த நீ கோவிந்தா என்று எழுந்தாய்
விலையில்லாமல் பெற்ற வேப்பங்குச்சியில் பல்துலக்கினாய்
நீராகாரம் அருந்தி வயலில் வேலைக்குச் சென்றாய்
வியர்வை சிந்த உழைத்து வீட்டிற்கு திரும்பிய உனக்கு
கேப்பக்களியோ கம்மங்களியோ அன்போடு அம்மா தந்தாள்;
வேப்பமர நிழலிலோ, ஆலமர நிழலிலோ சதுரங்கம் ஆடினாய்;
இதனோடே உன் பசுவையும் கவனித்துக் கொண்டாய்
மாலைநேரம் வயலை வலம் வந்து வீடு திரும்பினாய்
சுடுசோற்றோடு வீட்டிலிருந்த முருங்கைக்கீரையை சேர்த்துண்டாய்
திண்ணையில் துண்டை விரித்து நாராயணா எனச்சொல்லி உறங்கினாய்
சர்க்கரை, இரத்தக்கொதிப்பு நோயுமில்லை மருந்துமில்லை !
 
இன்று......
ஆறுமணிக்கு அலாரமடித்தாலும்
அலுப்போடு எட்டுவரை புரள்கிறாய்
பிளாஸ்டிக் பிரஷ்ஷில்
வேதிப்பொருளாலான பசையினால்
பல்லைக் கரைக்கிறாய்
இட்லி, பூரி தோசை, ரொட்டி, ஜாம்
என அடுக்கடுக்காய் காலை உணவு
வாகனமேறி அலுவலகமடைந்து
குளிர்சாதன அறையில் சுழல் நாற்காலியில்
கணினி முன்னே அலுவலென
எட்டு மணி நேரத்திற்குமேல்
மதியம் காய்கறியோடு வெள்ளைச்சோறு
குழம்பு ரசம், தயிர் என பலவகையோடு
இடையிடையே தேநீர், பலகாரங்கள் வேறு
மாலையில் கிளப் மதுவகைகள் டிஸ்கொத்தேயென
பலவித களிப்பூட்டும் நிகழ்ச்சிகள்
பிஸா, பர்கர், நான் என பலவகை கொண்ட டின்னர்
இல்லமடைந்து நடுஇரவில் ஏசி அறையில்
இலவம்பஞ்சு மெத்தையில் நீ உறங்குகிறாய் !
ஒருநாள் திடீரென நெஞ்சைப் பிடிக்கிறாய்
சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதயத்தில் அடைப்பு,
அடுக்குகிறார் மருத்துவர்
அடுக்கிவைத்த நோட்டுகளை
அலுங்காமல் அள்ளுகிறார் உன்னிடமிருந்து
நீயறியாமலே உன்னுயிரையும் கூட !
இது சுதந்திரமென்றால்
காறிஉமிழத் தோணுதையா !
 
 
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக