சனி, 6 அக்டோபர், 2012

தாய்மை

தாய்மை   

தாய்மை ஒவ்வொருவரும் மிகவும் புளகாங்கிதமடைந்து பேசக்கூடிய, எழுதக்கூடிய வார்த்தை. 
பெற்ற தாயின் மூலமாக ஒவ்வொருவரும் அடையும் ஒன்று. நான் சந்தித்த பெரும்பாலானோர் தாயின் மூலமாக மட்டுமே கிடைப்பது தாய்மை என்றே சொல்லினர். ஆயின் நான் பெற்ற அனுபவங்கள் வேறானது.

ஒன்றரை வயது வரை எனை ஈன்ற தாய் பாலூட்டி சீராட்டி தன் தாய்மையைக் காட்டியதோடு ஊட்டியும் விட்டாள். பின்னர் மகனில்லாத என் தாய்வழிப்பாட்டி என்னை எந்த சடங்கும் இல்லாமல் தத்து எடுத்துக் கொண்டாள். தனக்கொரு மகனிருந்திருந்தால் எப்படி வளர்த்து இருப்பாளோ அப்படி என்னை வளர்த்தாள். தாய்மையை முதன்முதலாக தாயினைத் தவிர்து மற்ற ஒருவரிடம் பெற ஆரம்பித்தது இங்கிருந்துதான்.

ஆறுதல், அரவணைப்பு, கண்டிப்பு என அத்தனையையும் என்னிடம் காட்டினாள். ஆயினும் என்னிடம் நேராகக் காட்டாமல் அவள் எனக்கு உணர்த்திய ஒன்று உழைப்பு. அதனை அன்று உணர்ந்தேனில்லை. இன்று அவள் என்னோடு இல்லை. நினைத்துப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது அவளது உழைப்பு.

எனது கல்லூரிக் காலங்களில் கல்லூரியில் நான் எவரிடமும் தாய்மை உணர்வை அனுபவித்தது இல்லை. பின்னர் நான் வேலை பார்த்த இடங்களிலும் இத்தன்மையினை நான் வேறாரிடத்தும் கண்டேனில்லை.

இதன்பின் எனது திருமணம், இதன்பின்னர் என் மனைவியிடம் இதனை உணர்ந்தேன். என் தாய் என்னுடனே இருந்து செய்வதைவிட மேலானதாக தாய்மை உணர்வினை என்மேல் பொழியும்போது வியந்து போகிறேன்.

இதனை அடுத்து தற்பொழுது எங்களுக்கு ஆத்மீக குருவாக இருந்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் நெமிலி ஸ்ரீ பாபாஜியிடம் தாய்மையுணர்வினைக்  காண்கிறேன். அது பொங்கி பிரவாகமாகி ஆத்மீக குடும்பங்கள் அனைத்திலும் இத் தாய்மையுணர்வை காணமுடிகிறது.

ஒவ்வொரு மனிதனிலும் தாய்மையுணர்வு பொதிந்து கிடக்கிறது. அது விழித்தெழுந்து விட்டால் இவ்வுலகில் நிறைய பிரச்சினைகள் குறையும் என்று பெரிதும் நம்புகின்றேன்.









சனி, 1 செப்டம்பர், 2012

என்னவள்

குருவே சர்வம்!


எழுத மிகவும் ஆவல் என் மனதிலே, ஆயினும் என்னுடன் பிறந்த தயக்கம் இதுநாள் வரை என்னைக் கட்டிப்போட்டுவிட்டது.  இப்பொழுதும் என்னவள் தந்த ஊக்கமே இவ்வலைப்பதிவினைத் துவக்க வித்திட்டது. என் வளர்ச்சிக்கு வித்திட்டோர், உதவியோர் எத்துணை பேர், ஆயினும் என் இல்லாள் தனித்துவமாய் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து, ரசித்து என்னை செதுக்கும் சிற்பியாய் நிற்கின்றாள். எனவே என் முதல் பதிவினை அவளுக்காக, அவளைப் பற்றியே.


காலமகள் எனக்கு அளித்திட்ட காவியம்
என் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கவள்.

தனக்கென ஒன்றும் வேண்டாள்
தானமாய் அனைத்தும் தந்தாலும் தடுத்திடாள்
இல்லாள் என்றும் இல்லை என்று சொல்லாள்.

இமைகூட என்விழி பிரிந்திடலாம்
இவள் மட்டும் பிரியாள் என்றும் என்னைவிட்டு.

என் நினைவில் ஒன்று உதிக்கையில்
அவள் கரங்களில் அது செயலாய்.

எத்தனை ஏளனங்கள், ஏச்சுக்கள் எதிர்வந்தாலும்
தான் கொண்ட நற்சிந்தனை மாறாள்.

இதுநாள் வரை யாரும் வாழ்த்தியதில்லை
இவளும் எதிர்பார்ப்பதில்லை
உறவுகளுக்கு சுமைதாங்கியாய் வாழ மறுப்பதில்லை
ஆயினும் உறவுகள் தரும் வலியெனக்குப் பொறுப்பதில்லை
இது அவளுக்கு ஏற்படுத்தும் வலி எனக்குப் புரிவதில்லை.


நல்லதோர் மகளாய், மருமகளாய்,
மனைவியாய், தாயாய், இன்னும்
எத்தனை பதவி வரினும் அதில் சிறப்பாள்
ஆயினும் ஒருவரும் அறியாரிதனை.

நானும் ஒருவனாயதில் அவ்வப்போது
இணைவது, அந்தோ பரிதாபம்.

இந்த நொடிமுதல் நிம்மதி கொண்டு
மகிழ்ச்சி கண்டு, வண்டென ரீங்காரமிட்டு
அவள் என்றும் வாழ வேண்டுகிறேன் இறையே!