சனி, 27 செப்டம்பர், 2014

பதினெண் வருடம்

இன்று சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு.
       பதினெட்டு ஆண்டுகள் நடந்த வழக்கு பலவித இழுபறிகளுக்கும், இடையூறுகளுக்கும் பின்னர் இன்று ஒரு முடிவுக்கு வர இருக்கிறது. பதினெட்டு என்பது நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான எண். பதினெண் புராணங்கள், பதினெட்டு நாள் மஹாபாரத யுத்தம் என பல முக்கியமான விஷயங்கள் பதினெட்டு என்ற எண்ணோடு தொடர்பு கொண்டது.
      இன்னமும் இந்த வழக்கை நீட்டிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை நீதித்துறை தகர்த்தெறிந்துவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தமிழகத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறிருக்கும். தமிழக முதல்வர் இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டால், அவர் உடனே பதவி விலக வேண்டி வரும். அப்பொழுது பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு இருக்குமா அல்லது வேறொருவரை அவ்விடத்திற்கு கொண்டு வருவாரா என்பது போன்ற பல கருத்துக்கள் மக்களிடையே உலா வந்து கொண்டிருக்கின்றன.
       இன்னொரு பக்கம் அம்மா எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து விட்டு வெற்றிச் செல்வியாக வலம் வருவார் என்ற நம்பிக்கைப் பேச்சு ரத்தத்தின் ரத்தங்களால் சொல்லப்பட்டுக் கொண்டே மறுபக்கம் யாகங்களும் வேள்விகளும் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. உள்ளே ஒரு எதிர்பார்ப்பும் இருக்குமல்லவா? ஒரு வேளை அம்மா தோல்வியைத் தழுவினால், தீர்ப்பு எதிராக அமைந்துவிட்டால் நமது வேடம் என்ன என்று ஒவ்வொரு இரண்டாம் கட்டத் தலைவரும் யோசித்துக் கொண்டிருப்பர். முதல்வர் பொறுப்பு தனக்குக் கிடைக்குமா என்று ஜோஸ்யமும் பார்த்திருப்பர்.
       வெற்றி ஏற்பட்டால் என்ன ஆகும்? ஜெயலலிதா வெற்றிச் செல்வியாக வலம் வருவதோடு மேலும் பலம் பெற்றவராகிவிடுவார். கூட்டணி என்ற பேச்சே இருக்காது. வரும் சட்டமன்றத் தேர்தலை தனியொருவராக எதிர்கொள்ளத் தயாராகிவிடுவார். ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்கட்சி குழப்பங்களால் பலவீமனமடைந்துள்ள தி.மு.க வின் மீது ஏவுகணைகளை வீசுவார். பொய் வழக்கு, கருணாநிதியின் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் ரத்தத்தின் ரத்தங்களால் தொடர்ந்து நடத்தப்படும். மின் தடை, மிக மோசமாக ஆமை வேகத்தில் நடைபெறும் அரசு நிர்வாகம், ஊழல்கள், ஊற்றெடுத்துப் பாயும் மது போன்றவை பின் நோக்கித் தள்ளப்படும். இவை மக்களின் சிந்தையைலிருந்து அப்புறப்படுத்தும் நிகழ்வுகளைச் செய்வதில் நேரம் செலவழிக்கப்படும்.
       மாறாக, அமைதியாக இருந்து நிர்வாகச் சீர்திருத்தம், மதுகுறைப்பு, விவசாயத்திற்கு முக்கியத்துவம், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்கள், அதற்கான செயல்பாடுகள் என நடைபோட்டால் தமிழகம் நலம்பெறும்;வளம் பெறும். இந்த ஆசையோ எதிர்பார்ப்போ மக்களிடம் இருக்கும் என எதிர்பார்க்கவே இயலாது. ஆனாலும் ஒரு சிலரிடம் இப்படி நடக்காதா என்ற ஆதங்கம் இல்லாமலிருக்காது.
       தி.மு.க வின் நிலை ஜெயலலிதாவின் வெற்றியினால் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு எவ்வளவு உள்ளதோ அதே அளவு வாய்ப்பு தன்னை பலப்படுத்திக்கொள்ளவும் அக்கட்சிக்கு இருக்கிறது என்பதே உண்மை. இன்னும் ஒட்டிக்கொண்டுள்ள உடன்பிறப்புகளை அழுத்தமாக கட்சியுடன் ஒட்டும் வேலையை கருணாநிதியால் செய்ய இயலும். ஆனால் அவரது வயதும், குடும்ப அரசியலும் இதை அனுமதிக்குமா என்பது மிகப்பெரியக் கேள்விக்குறி. குடும்ப அரசியல் தொண்டர்களிடையே ஒரு வெறுப்பினை ஏற்படுத்தியுள்ளது என்ற உண்மையும் சுடத்தானே செய்கிறது.
        எதிரணியினர் இதை எப்படி எதிர்கொள்வர்? நீதித்துறை விலைபோய்விட்டது. போயஸ்தோட்டத்திற்கு அடிமையாகிவிட்டது. இப்படி அடுக்குமொழியில் வசனங்கள் கூர்தீட்டப்பட்டு வெளியாகும். நீதித்துறையை இது போல் கீழ்த்தரமாக யாரும் விமர்சிக்க முடியாது என்ற நிலையில் இவ்வசனங்கள் எழுத்திலும் பேச்சிலும் இருக்கும். இணையத்தில் பொங்கும் புலிகள் தங்கள் விகார மனங்களின் ஆசைகளை தங்கள் வார்த்தைகளில் வடித்துத் தீர்த்துக் கொள்வர். தனக்குச் சாதகமாக தீர்ப்பு இருந்தால் நீதித்துறையும் போற்றுவதும், இல்லையெனில் தூற்றுவதும் வாடிக்கையாகிப் போன ஒன்று.
        மாறாக இவ்வழக்கில் ஜெயலலிதா தோல்வியடைந்தால் என்ன நிகழும்? ஒரு பொம்மை கொலுவில் அமர்த்தப்படலாம். அது எந்த பொம்மை என்பது சசிகலாவுக்கே தெரிந்திருக்குமா? அப்படி ஒரு பொம்மை ஆட்சியில் அமர்த்தப்பட்டால் அது கருணாநிதியால் புகழப்படும். ஒவ்வொரு முறை அரசுப் பொறுப்பு கிடைக்கும்போதும் தனது மகனுக்குக் கூட வழிவிடாத இவர் அ.தி.மு.க வில் ஒரு தொண்டருக்குப் பொறுப்பு கிடைத்ததை எண்ணி இறும்பூது எய்துவார்.  
  
       
        தான் நியாயமாகத் தொடர்ந்த வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டு விட்டது. நீதித்துறை பணபலத்துக்குப் பணியாமல், எந்த அதிகாரத்திற்கும் வளைந்து கொடுக்காமல் தன் கடமையைச் சரிவரச் செய்துவிட்டது என்பார். அன்றுபோல் இன்றும் அ.தி.மு.க ஊழலில் மிகப்பெரிய அளவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பார். வளைத்து வளைத்து அவர் கொடுக்கும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க அ.தி.முவினர் நிலை தடுமாறித்தான் போக வேண்டியிருக்கும்.

           ஆனால் ஜெயலலிதா மிக உறுதியாக நிற்பார். தனது பொம்மையை ஆட்டுவிக்கும் கலையை மிகத் திறம்படச் செய்வார். நிர்வாகக் குறைகளுக்கு தன் பொம்மையை காரணமாக்கி, சிறப்புகளுக்குத் தன்னைக் காரணமாகக் காட்டிக் கொள்ளும் வல்லமை அவருக்குண்டு. முன்னைவிடத் தீவிரமாகத் தி.மு.கவினரை தாக்கத் துவங்குவார். ஆனால் கடந்த நாட்களில் அவரது கட்சியினர் ஆங்காங்கே உடன்பிறப்புகளோடு கொண்டுள்ள உறவு இதனை சீர்குலைக்க முயற்சிக்கும். இன்னும் தீவிரமாக அவர்களை களையெடுக்க வேண்டிய வேலைகள் அவருக்குக் காத்திருக்கும்.
        தீர்ப்புக்குப் பின் சிறை என்ற நிலை ஏற்பட்டால் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கு என்ன ஏற்பாடு நடந்திருக்கிறது என்பது தெரிய வரும்போதே ஜெயலலிதாவின் உண்மையான திறமை நமக்குத் தெரியவர வாய்ப்பிருக்கிறது.
                                                                             உண்மையில் அதிமுக, திமுக என இரு திராவிட கட்சிகளிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தப்போகிறது இன்றைய தீர்ப்பு. பொறுத்திருந்து பார்ப்போம். காலம் வரலாற்றில் என்ன பதியக் காத்திருக்கிறது, எதை நோக்கி தமிழக அரசியலை நகர்த்தப்போகிறது என்பதற்கான விடை இன்னும் சில நாளில் ஓரளவுக்குப் புரிந்துவிடும்.




புதன், 17 செப்டம்பர், 2014

பகுத்தறிவுவாதியா ? பகுத்தறிவாளரா ?

       நம்பிக்கை எது, மூட நம்பிக்கை எது என்பதை பகுத்து அறிந்து கொள்ளும் அறிவே பகுத்தறிவு. நீங்கள் ஒன்றைப் பகுத்து அறிய வேண்டுமெனில் அதன் இரு வேறுபட்ட தன்மையோ, அல்லது பன்முகத்தன்மையோ அதனை எந்தவித சார்நிலைப்பாடும் இல்லாமல் அறிய முற்படுகையில் மட்டுமே உண்மையை நோக்கி நகர முடியும்.

      துரதிருஷ்டவசமாக இன்று பகுத்தறிவு என்பது பெரும்பான்மையானோரின் நம்பிக்கையை புறந்தள்ளுவது என்பதாக ஆகிவிட்டது. ஒரு பக்திமான் தனது குரு சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு பயணப்படுகின்றான் எனில் அது அவன் சார்ந்துள்ள கொள்கை நிலைப்பாட்டுக்கு உகந்ததாக ஆகிவிடுகிறது. ஏனெனில் வைதீக மார்க்கம் குரு சொல்வதனை மீறாமல் அவர் வழி நடக்க வேண்டும் என்றே போதிக்கிறது.

      நாத்திகம் என்பது பண்டைய இந்து மரபில் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் அதன் தன்மையோடு இன்றைய நாத்திகத்தை ஒப்பிட முடியாது. அதுபோலவே பண்டைய வைதீக முறைகளுக்கும், பக்தி வழிகளுக்கும், இன்றைய நிலைக்கும் நிறைய வேறுபாடு இருக்க வேண்டும் என உறுதியாக நம்புகின்றேன்.

      இன்றைய நாத்திகம் பொதுவாக ஈ.வெ.ரா வின் வழி என்றே
கொள்ளலாம். அவர் தவிர்க்க இயலாத வரலாற்று நிகழ்வு எனக் கொள்ளலாம். அவர் நோக்கம் என்ன, அவர் உறுதியான நிலைப்பாடு உள்ளவரா என்பதை அனைவரும் அறிவர். ஆனால் நான் காண்பது அவரால் நிச்சயம் சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பேன்.

      ஆத்திக வழியைப் பின்பற்றும் பலருக்கும் தன் பாரம்பரியப் பழக்கவழக்கங்களை அலசுகின்ற ஒரு மனோபாவம் ஏற்பட்டுள்ளது. மூர்க்கத்தனமாக வசைபாடும் நாத்திகர்களின் பேச்சு இவர்களுக்கு தங்கள் பழக்கத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக ஆராய்ச்சியை ஊக்குவித்திருக்கிறது, உண்மையைத் தேடி நகர்ந்திருக்கிறார்கள்.  இன்னமும் நகர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

      சாதி வேறுபாடின்றி அனைவரும் வேத வேதாந்தக் கருத்துக்களை அறிய முற்படுகின்றனர். அதில் சார்பின்றி உண்மையை மட்டுமே நோக்கி நகர்கின்ற பலபேர் இருக்கிறார்கள், ஆனால் இங்கும் தன் பண்டைய அழுக்கு மூட்டையை சுமக்கும் நபர்கள் இல்லாமல் இல்லை என்பதும் உண்மை. ஆனால் இவர்கள் சிறு அளவு;மேலும் காலப்போக்கில் காணாமல் போய்விடக்கூடியவர்கள்.

      இளைய தலைமுறைக்கு தங்கள் பாரம்பரிய விஷயங்களை கண்டறிவதிலும், நிலைநாட்டுவதிலும் அபார விருப்பம் மட்டுமல்ல அசுர உழைப்புக்கும் தயாராக உள்ளனர். ஆனால் இவர்கள் மீண்டும் தங்களை அறியாமல் சில அரதப்பழசான, செல்லாக்காசான, காலத்திற்கு ஒவ்வாத சில விஷயங்களையும் அணைத்துக் கொண்டு விடுவார்களோ என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.

      ஈ.வெ.ராவின் இன்றைய தொண்டர்கள் மூடநம்பிக்கை கொண்டவர்கள் என்பதை உறுதியாகக் கொள்ள இயலும். ஈ.வெ.ரா உருவ வழிபாட்டை எதிர்த்தார். ஆனால் இன்று வெட்கமேயில்லாமல் அவரது உருவத்தை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் நான் இதனை அருவெறுப்பாகக் காணவில்லை. ஏனெனில் அதுதான் இந்த மண்ணின் உண்மையான பாரம்பரிய குணம். அது அவர்களை விட்டு நீங்கவில்லை. ஆனால் ஈ.வெ.ரா கொடுத்ததாகச் சொல்லப்படுகின்ற அச்சமற்ற உணர்வு அவர்களிடம் இல்லை.

      அச்சமற்ற உணர்வு இருக்கின்ற எவரும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளத் தயங்கமாட்டார்கள். மேலும் தங்களது செயல்களை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவும் செய்வார்கள். ஏன் எதற்கு என்ற கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று ஈ.வெ.ரா சொல்லியிருக்கிறாரே, அவர் சொன்னதையும் ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவரை வழிபாடு செய்பவர்களுக்கு வரவேண்டுமே? ஊஹூம். போலி சாமியார்களின் பின்னால் போகும் மூடபக்தனுக்கும், வெறுமே ஒரு சார்புடைய புத்தகங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தான் பகுத்தறிந்துவிட்டதாகக் கூறும் போலிப் பகுத்தறிவுவாதிகளுக்கும் எவ்வித வேறுபாடுமில்லை.
      
      மேலும் அச்சமற்ற உணர்வு கொண்டவர்கள், தாங்களாக கற்பித்துக் கொண்ட ஒரு விஷயத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். இன்று இல்லாத பிராமண ஆதிக்கம்; ஆனால் அது இன்றும் இருப்பதாக நம்பி வாழ்ந்து கொண்டு அதன் மீது வெறுப்பையும், கோபத்தையும், வசைச்சொற்களையும் வீசிக் கொண்டிருப்பவர்களை எப்படி அச்சமற்றவர்கள் என்று கூற இயலும். அச்சமற்ற இயல்பு இல்லாதவர்கள் எப்படி பகுத்தறிவாளர்களாக இருக்க இயலும்? இவர்களை வெறுமே பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லலாமே ஒழிய பகுத்தறிவாளர்கள் என்று நிச்சயமாகக் கூற இயலாது. 

      மரத்தை வழிபட்டது, கல்லை வழிபட்டது, மண்ணை வழிபட்டது, நீரை வழிபட்டது, பசுவை வழிபட்டது நம் பாரம்பர்யம். ஐயகோ இதைப்போல் ஒரு மூட நம்பிக்கை உண்டா என்று கேலி செய்து திரிந்தது ஒரு கூட்டம். ஆனால் அதே கூட்டம் இன்று மரத்தைக் காப்போம், கல்லைக் காப்போம், மண்ணைக்காப்போம், நாட்டுப்பசுவைக் காப்போம் எனத் திரும்பத் தொடங்கியிருக்கிறது. ஏனப்பா ஒரு காலத்தில் இதை தெய்வமாக மதித்து காப்பாற்றி வந்தார்களே; அப்பொழுது அவை பாதுகாப்பாக இருந்ததே; இது தெய்வமல்ல இயற்கை என்று கற்றுக் கொடுத்தாயே; இப்பொழுது நிலை என்ன?

      இங்கு கொடுமை என்னவென்றால் பிள்ளையார் ஒரு அரசமரத்தடியில் அமைதியாக இருந்தார். அந்த மரத்தை வெட்டி பல கோடி ரூபாய் செலவில் கோயிலைக் கட்டி அந்த இடத்தின் அமைதியைக் கெடுக்கிறான் ஆத்திகன். மரத்தை வழிபட்டது மூடத்தனம் என்று
நம்பிவிட்டான். வெறுமே குத்தி நடப்பட்ட கல்லைக் கும்பிட்டு அந்த கல்லைச் சுற்றியிருந்த நிலத்தையும் புனிதமாகக் கருதி வந்தான். ஆனால் இன்று அங்கும் கோயிலைக் கட்டி சுற்றியிருந்த கற்களையெல்லாம் வெட்டி எறிந்து காங்க்ரீட் கட்டிடங்களாக்கி விட்டான். கல்லை வணங்குவது மூடத்தனம் என்றதன் பயனிது.

      நீரில் மலம் கழிப்பதோ, சிறுநீர் கழிப்பதோ பாவம் என்றுதான் எனக்கும் சின்ன வயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று அரசாங்கமே அத்தனைக் கழிவுகளையும் ஆற்றில் சேர்க்கிறது. கிராமத்தில் ஏரி குளங்கள் மலக்கிடங்குகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. நீர் தெய்வமல்ல என்ற நினைப்பின் பயனிது.


      நீர் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் இன்று பல முதலாளிகள் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி விற்று தனிப்பட்ட முறையில் பயனடைகிறார்கள். அவர்களில் பலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களும், இறைபக்தி கொண்டவர்களும் எனப் பல்வேறுபட்டவர்களும் இருக்கிறார்கள். நீர் விற்பது பாவம் என்று கருதிய ஒரு சமூகம் ஏன் இன்று இந்த அவல நிலைக்குப் போனது. எல்லோருக்கும் பொதுவான நீரை ஒருவன் மட்டுமே எடுத்து விற்றுப் பொருள் ஈட்டுகின்றானே; இது சமூகத்திற்குப் புறம்பானதாயிற்றே என்ற எண்ணம் ஒருவருக்கும் எழவில்லையே ஏன்?

      தனிமனித உரிமை என்றோம். தனி மனிதன் வளர தன் சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கின்றான். நாம் சமுதாயத்தின் உரிமைக்குக் குரல் கொடுத்தவர்கள். ஒட்டு மொத்த சமுதாயத்தின் நன்மைக்காக தனி மனித விருப்பு வெறுப்புகளைத் துறந்தவர்கள். என்று நாம் தனி மனித உரிமை, மனித உரிமை என்பதிலிருந்து மாறி சமுதாய நன்மையைப் பற்றிப் பேசுகிறோமோ, தனி மனிதனின் சமுதாயத்திற்கான கடமையைப் பற்றி பேசுகிறோமோ அன்றுதான் இதற்குத் தீர்வு கிடைக்கும்.

      ஆற்று மணலை அரசும், கறுப்பு முதலாளிகளும் களவாடும் நிலை எந்த ஆற்றுப் படுகையிலும் தொடர்ந்து நடந்து கொண்டேதானிருக்கிறது. சுற்றி வசிக்கும் மக்களுக்கு சூடு சொரணை என்பதே இல்லை. நமது தெய்வம் சுரண்டப்படுகிறதே என்ற வருத்தம் கிஞ்சித்தும் இல்லை. மண்ணை வழிபடுதல் மடத்தனம் என்றீர்களே, விளைவு இதுதான்.

      பசுவை வழிபட்டது, அதன் கோமியத்தை அருந்தியது இன்றளவும் மிகுந்த எள்ளி நகையாடலுக்கு உள்ளான ஒன்று. விளைவு நாட்டுப் பசுக்கள் அருகிப்போனது. அடிமாடுகளாக்கி அந்நிய தேசத்துக்கு விருந்து படைத்தோம். ஆகக் கிடைத்த பயனென்ன; ஜெர்சி பசுக்கள் பெருகி உணவுக்குத் தகுதியற்ற பாலை அருந்துகிறோம். அதன் சாணமோ, கோமியமோ மருந்துக்கோ உரத்துக்கோ லாயக்கற்றது என்பதை இன்று உணரும்போது எங்கு காணினும் ஜெர்சியடா என்றுதான் பாடும் நிலைமை.
      
      பால் விற்பனைக்குரிய பொருளாக இருந்ததில்லை. இன்று அது வணிகமாக ஆக்கப்படதன் பலனும் நாட்டுப்பசுக்கள் அழிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. இன்று பசு தெய்வமாக பார்க்கப்படவில்லை; அது ஒரு வணிகப் பொருளாக பார்க்கப்படுகிறது. பசுவின் இறப்பு வரை அதனைப் பாதுகாத்த விவசாயி இன்று இளங்கன்றையும் அடிமாட்டுக்கு விற்கும் நிலைமை. இளங்கன்றை ஆட்டிறைச்சிக்குப் பதிலாக விற்கிறார்களாம். ஏமாற்ற நினக்கும் ஒருவன். தான் என்ன உண்கிறோம் என்பதை அறியாமல் உண்ணும் ஒருவன்.

      இன்று நிலைமையுணர்ந்து பலரும் பாரம்பர்யத்தை மீட்டெடுக்க முயலுகையில் மீண்டும் ஒரு விஷமப் பிரசாரம் நடக்கிறது. பசு இறைச்சி எங்கள் பாரம்பர்ய உணவு என்று. பசு உணவாக இருந்திருக்கலாம்; ஆனால் அது எந்த காலகட்டத்தில்; மனிதனை உண்டது கூட ஒரு காலத்தில் நிகழ்ந்திருக்கும்; அதையும் பாரம்பர்ய உணவு என்று கொள்ள இயலுமா? பசு இறைச்சியை பாரம்பர்ய உணவாகக் கூறும் சிலர் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆம் இவர்கள் வாதிகள் அறிவாளர்கள் அல்ல.

      நீர், மரம், கல், மண், பசு இவை தெய்வங்களாக இல்லாமல் இருக்கலாம். இவைகள் தெய்வங்களுக்கு கொடுக்கப்படும் அடையாளமான எல்லையில்லா வல்லமை அற்றவையாக இருக்கலாம். ஆனால் மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நன்மையளிப்பன. தனக்கு நன்மையைக் கொடுக்கும் ஒன்றைத் தெய்வமாகக் கொண்டாடிய ஒரு நாகரீகம் மூடநம்பிக்கையுடையதா? அது அத்தனையையும் வணிக நோக்கில் காண்கின்ற ஒரு சமூகம் மூட நம்பிக்கையுடையதா?

      இங்கு மதம் சமுதாய உணர்வோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்ற ஒன்று. சமுதாய நன்மையைக் கருத்தில் கொண்டே மதச் சடங்குகள் அமைகின்றன, அமைய வேண்டும். என்று அவை செயலிழக்கின்றனவோ அன்று சமுதாயத்தின் நன்மைகள் முடங்கிப் போகும். நான் வெறும் போலிச் சடங்குகளைப் போற்றச் சொல்லவில்லை. உண்மையை நோக்கி நகரச் சொல்கிறேன். பகுத்து அறிந்து காலத்திற்கு ஒத்த சமுதாயத்திற்கு நன்மை பயக்கக் கூடிய சடங்குகளை முன்னிறுத்த வேண்டும். அவைதான் சாதாரண பாமர மக்களை சமூகத்தோடு பிணைத்து உயர்நிலைக்கு உந்திச் செல்லும் சக்தியாக மாறும்.

      வெற்றுச் சடங்குகளில் தோய்ந்து நிற்பதும் நம்மைச் சேற்றுக்குள் அமிழ்ந்து கிடக்கும் நிலைக்கு மாற்றி விடும். ஆராய்ந்து பாரம்பர்யத்தை பேண நினைக்கும் இளைய தலைமுறையினர் உண்மையை அறிவதில் எவ்விடத்திலும் சுணக்கமில்லாமல் இருக்க வேண்டும். உண்மையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். உண்மையை நோக்கி நகராமல், காலத்திற்கேற்ப தன்னைச் செவ்வியல் படுத்திக் கொள்ளாத சமூகம் எப்படி பகுத்தறிவு கொண்ட சமூகமாக மாறும்.

      சார்பற்று உண்மையைத் தேடும் ஒரு மனிதனே பகுத்தறிவாளன். பகுத்தறிவாளன் என்று பறைசாற்றிக் கொண்ட ஒருவர் சொன்னதை ஒருவன் அப்படியே ஏற்றுக் கொண்டால் அவனும் மூட நம்பிக்கையாளனே. அவனை பகுத்தறிவு வியாதி பீடித்துள்ளதே தவிர பகுத்தறிந்து கொள்ளும் தன்மை வளரவில்லை. உண்மையான பகுத்தறிவாளனே ஆன்மிகத்தில் ஈடுபடமுடியும். அப்படிப்பட்டவனே உண்மையைத் தேடிச் செல்ல இயலும். உண்மையத் தேடிச் செல்பவனே இறைவனை உணர இயலும்.

பின்குறிப்பு: இன்று காலை கணினி முன் அமர்ந்தபோது என் மனதில் தோன்றியதை தட்டச்சு செய்து வலைப்பூவில் ஏற்றுவதற்காக வைத்திருந்தேன். நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான் இன்று திரு. ஈ.வெ.ரா அவர்களின் பிறந்த நாள் என்பது நினைவுக்கு வந்தது. இன்று பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்களின் பிறந்தநாளும் என்றறியும்போது ஒரு திகைப்பு ஏற்படுகிறது. காலம் அதன் போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அது தன் வினைகளை தனக்கேற்றவாறு
வரலாற்றில் நிகழ்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அது ஏற்படுத்தும் விளைவுகளை என்றும் முழுமையாய் தீமையானது என்று சொல்வதற்கில்லை. காலப்போக்கில் அது ஏற்படுத்தும் விளைவுகளைக் கொண்டே தீர்மானிக்க இயலும். மேலும் இது தனி மனிதர்களின் மன ஓட்டத்தைப் பொறுத்தே அமைகின்றது. அப்படித்தான் நான் ஈ.வெ.ரா மற்றும் மோதி அவர்களின் விளைவுகளை ஒன்று போலவே காண்கிறேன். இது மற்றவருக்கு ஏற்புடையதாக இல்லாமலிருக்கலாம். ஒவ்வொருவரிடமும் மற்றவர்க்கு ஏற்புடைய மாற்றான என்ற இரண்டு விதமான கருத்துக்களும் இருக்கும். நமக்கு மாற்றுக் கருத்துக்கள் அதிகமாக இருப்பவரை புறந்தள்ளி விட இயலாது. வரலாற்றில் அவர் மூலம் காலம் ஆற்றிய வினைகள் என்றும் மறுப்பதற்கோ ,மறப்பதற்கோ இயலாது.  

            

புதன், 10 செப்டம்பர், 2014

ஆசிரியர் தின உரை - 2014

திருப்பூர் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி பள்ளிகள் சங்கமும் திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் மற்றும் திருப்பூர் நிட் சிட்டி அரிமா சங்கமும் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் தினவிழாவில் நான் ஆற்றிய உரை.

அன்பிற்குரிய ஆசிரியர்களே,

      உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். நான் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன். எதையும் நான் கூறும் அறிவுரையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

      நேற்றைய தி தமிழ் ஹிந்து நாளிதழில் திரு .பி.ஏ. க்ருஷ்ணன் எழுதியுள்ள ஆசிரியர்களே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு செய்தி என்னவெனில், “ இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய சர்வேயில் 66% பட்டதாரிகள் எந்த வேலைக்கும் லாயக்கில்லாதவர்கள்; இவர்களில் பொறியியல் மாணவர்களை ஒதுக்கிவிட்டால் இந்த அளவு 85% லிருந்து 90%” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியத் தொழில் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு தொழில் துறைக்குத் தேவையான வசதிகளைப் பற்றிய ஆலோசனைகளைக் கூறக்கூடிய அமைப்பு. இவ்வமைப்பு இவ்வாறு ஒரு செய்தி வெளியிட்டிருக்குமானால் அதன் விளைவு என்ன? நம் தேசத்தின் நிலையென்ன என்ற எண்ணம் எழுகிறதல்லவா? இதனை ஆசிரியர்களாகிய நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இதனைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

      (ஒரு ஆசிரியை இன்று உள்ள கல்வித்திட்டம் தவறானது; இது மாற்றப்பட வேண்டும்; சுய சிந்தனை உள்ள மாணவர்களை உருவாக்குமாறு கல்வித் திட்டம் அமைய வேண்டும் என்றார். இந்த கருத்தையே பெரும்பாலான ஆசிரியர்கள் வலியுறுத்தினர்)

      இன்றைய கல்வித்திட்டம் சரியல்ல என்கிற நீங்கள் இதை மாற்றுவதற்கு என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள்? இதற்கான பதில் நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதைத்தானே நாங்கள் செய்ய முடியும் என்றவாறு அமைந்தது. நீங்கள் இந்த பணியை ஒரு வேலையாகப் பார்க்கிறீர்களா, அல்லது வேறு எவ்வாறாவாது காண்கிறீர்களா என்றேன். உடனே ஒட்டு மொத்தமாக சேவையாகச் செய்கிறோம் என்ற பதில் கிடைத்தது.

      நான் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் சர்வேயை கல்வித் திட்டத்தின் குறைபாட்டை உணர்த்துவதாக மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் தவறவிட்டுவிட்ட ஒரு செயலையும் சுட்டுவதாகவும் உணர்கிறேன். ஏனெனில் இங்கு லாயக்கில்லாதவர்கள் என்று இவர்கள் குறிப்பிடும் அனைவரும் முட்டாள்களல்ல. பெற்றோராலோ, சமுதாயத்தாலோ ஏதோ ஒன்றைப் படிக்கத் தள்ளிவிடப்பட்டவர்களேத் தவிர, தங்கள் விருப்பம், திறமையைக் கொண்டு தங்கள் படிப்பினைத் தீர்மானிக்கவில்லை.

      பெற்றோரும் ஆசிரியரும் மட்டுமே, தங்கள் பிள்ளைகளின் தனித் திறமையை, ஆர்வத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றவர்கள். இதில் அதனை அறிந்து கொண்டு ஊக்குவிக்க வேண்டிய கடமை ஆசிரியருக்கு மிக அதிகமாக உள்ளது. இதனை நீங்கள் எத்தனை பேர் செய்திருக்கிறீர்கள்? இதனைச் செய்திருந்தாலே பல மானவர்களின் எதிர்காலம் புதிய பாதையில் பயணப்பட்டிருக்கும். உங்களின் சேவை என்ற ஒரு சொல் முழுவடிவம் கண்டிருக்கும். அப்துல் கலாமடைந்த இன்றைய நிலை அவரின் ஆசிரியர் அவருக்களித்த ஒன்று. அன்று அந்த ஆசிரியர் அவரது திறமையை ஊக்குவிக்காமல் இருந்திருந்தால் இன்று அவரும் அந்த லாயக்கில்லாதவர் பட்டியலிலே இடம் பெற்றிருந்திருக்கலாம்.

      கல்வித் திட்டம் சரியில்லை, மாற்றுக்கல்வி வேண்டும் என்று சமுதாயத்தின் பல தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை இல்லை முழுமையாக என்று கூட சொல்லிவிடலாம் கல்விக்கூடங்களுக்கு வெளியிலிருந்துதான் எழுகிறது. உண்மையில் இது ஆசிரியர்களாகிய உங்களிடமிருந்து எழ வேண்டும். நீங்கள் உங்கள் நிர்வாகத்துக்கும், அரசுக்கும் இதனைத் தெரியப்படுத்த வேண்டும்.

      இந்த மாற்றுக் கல்வித் திட்டம் வருவதற்கு முன்னர் உங்களால் உங்கள் வகுப்பறைக்குள், உங்கள் கல்விக் கூடத்திற்குள் உங்களால் என்னென்ன மாறுதலை ஏற்படுத்த முடியுமென்று யோசியுங்கள். அதற்கு உத்வேகத்துடன் தயாராகுங்கள்.
    
அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ள சில ஆலோசனைகள்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பதி ழுக்கு என்பது வள்ளுவன் வாக்கு. இங்கு நீங்கள் ஆசிரிய சேவையை துணிந்து எடுத்துள்ளீர்கள். உங்களது எண்ணமும் துணிவும் எவ்வாறு அமைய வேண்டும்?

எண்ணுக;

* பெரிதாகச் சிந்தியுங்கள் - உங்கள் இலக்குகளை பெரிதாக அமைத்துக் கொள்ளுங்கள்; உங்கள் கனவுகள் பெரிதாக அமையட்டும்.

* உங்கள் தெய்வீக சக்தி குறித்து சிந்தனை செய்யுங்கள் - ஆசிரியப் பணி என்பது மிக மகத்தானது. ஒரு சமுதாயத்தை சிற்பி போல செதுக்க வேண்டிய பணி. எனவே நீங்கள் தெய்வீகமானவர்கள். உங்கள் சக்தியின் அருமையை எண்ணுங்கள்.

* வித்தியாசமாகச் சிந்தியுங்கள் - ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு இப்படித்தான் கற்பித்தல் நிகழவேண்டும் என்றில்லாமல் அதன் எல்லையை விரிவு படுத்துங்கள். ஒவ்வொரு முறையும் வித்தியாசத்தை உணரச் செய்யுங்கள். வகுப்பறை என்றில்லாமல் மாணவன் கற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் அது மரத்தடியில் கூட நிகழட்டும். இடமும் சூழலும் வித்தியாசமாய் அமையட்டும்.

* தடைகளை வெல்லும் முறைகளைப் பற்றிச் சிந்தியுங்கள் - இவையெல்லாம் செய்யமுடியாமல் உங்களுக்கு ஏற்படும் தடைகளை எவ்வாறு அகற்றுவது என்று சிந்தியுங்கள். நீங்கள் அதனைச் சிந்திக்கையில் நிச்சயம் புத்தம் புதிய ஒரு வழி பிறக்கும். மாணவர்களுக்கு கற்றலில் ஏற்படும் தடைகளை அகற்ற புதிய வழிமுறைகளைச் சிந்தியுங்கள்.

துணிக

* வெற்றிக்குத் தேவையான அளவு பணி செய்க

* தொடர்ந்து வேலை செய்க  - தொடர்ச்சியான ஒரு செயலே நல்ல பலனைக் கொடுக்கும். ஆரம்ப நிலையிலேயே ஒரு செயலின் முடிவை நாம் தீர்மானித்து விட இயலாது. தொடர்ச்சியான முயற்சி வெற்றியை உறுதி செய்யும்.

* மன உறுதியுடன் வேலை செய்க - கடின உழைப்பும், தொடர்ச்சியான பணியும் அயர்ச்சியை உண்டாக்கிவிடக்கூடும். வரும் சோதனைகளும் அதிகமாகக் கூடும். இவையனைத்தையும் எதிர்கொள்ள மன உறுதி மிக அவசியம்.

* சமுதாயத்திற்காக வேலை செய்க - ஏற்கனவே நான் கூறினேன், நீங்கள் சமுதாயத்தைச் செதுக்கும் சிற்பிகள் என்று. எனவே உங்கள் பணியில் சமுதாயத்தின் நலன் முக்கியமான குறியீடாக அமைய வேண்டும். இன்று இங்கு தனி மனித உரிமை பேசப்படுகிறது. இது இந்தியாவுக்கான வார்த்தை அல்ல. இங்கு சமுதாய உரிமைதான் முக்கியம். உரிமை என்பதை விட கடமை என்ற வார்த்தை முக்கியம். தனி மனித உணர்வு ஐரோப்பியர்களுக்குச் சரியாக அமையலாம். நம்மைப் பொறுத்தவரை குடும்ப உணர்வுடன் செய்ல்படுபவர்கள். நாம் நம் சமுதாயம் மேம்பட உழைப்போம். தனி மனிதனின் தியாகம் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக அமைய வேண்டுமே ஒழிய சமுதாயம் தனி மனிதனுக்காக தியாகம் செய்வதாக அமையக்கூடாது.

ஆதிசங்கரரின் வாக்காக ஒன்றைக் கூறுவார்கள்;
”கர்த்தும் அகர்த்தும் அன்யதா வா கர்த்தும் ஷக்யதே” - ஒன்றைச் செய்யவும் செய்யாதிருக்கவும், வேறு விதமாகச் செய்யவும் வேண்டிய சுதந்திரமான படைப்பாற்றல் மனிதனுக்கே உள்ளது. எனவே நீங்கள் செய்ய வேண்டிய செயல்களையும், செய்யும் விதங்களையும் தீர்மானியுங்கள்.

      இதற்காக மேலும் உங்கள் தனித்திறனை மதிப்பிற்குரியதாக ஆக்கிக் கொள்ள சில ஆலோசனைகள்.

உள்ளார்ந்த நேயம் - நேயம் என்பது வெறும் நாடகமாகிவிடக்கூடாது. நமது உள்ளத்திலிருந்து வெளிப்படவேண்டும். இரு உதாரணங்களைக் கூறலாம்.

      ஒன்று மகாபாரதத்தில் கண்ணன், யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்திற்கு வந்த அனைவரையும் பாதங்கழுவி அழைத்தது. இதன் பலன் யாகத்தின் முதல் பூஜை அவன் வசமானது. இங்கு தென்னகத்தே ராஜராஜசோழன் தஞ்சைப் பெருவுடையார் கோவிலை நிர்மாணிக்கும் சிற்பிக்கு வெற்றிலைச் சாறு உமிழ பாத்திரம் தாங்கி நின்றது. மிகபெரிய கலைப் பொக்கிஷம் அமைத்த பெருமை அவன் வசமானது. இந்த நிகழ்வுகளை பணிவு எனக் குறிப்பிடாமல் நேயம் என்று குறிப்பிடுவதே சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

      ஒரு ஆசிரியையின் உள்ளார்ந்த நேயத்தின் உண்மைக் கதை ஒன்றக் காண்போம். ஒரு ஆசிரியை, மிகவும் கண்டிப்பானவர், நல்ல அறிவுக் கூர்மையுள்ளவர். ஆனால் அவரால் தத்தி மாணவர்களைச் சகித்துக் கொள்ள இயலாது. அந்த கல்வி வருடம் அவர் வகுப்பாசிரியை; அந்த வகுப்பிலிருந்து ஒரு மாணவனைத் தவிர அனைவரும் மிகச் சுட்டியாகச் தெரிந்தார்கள். அவன் மட்டும் ஏதோ பறிகொடுத்ததைப் போல இருந்தான். பாடங்கள் நடந்தன, வகுப்புத் தேர்வுகள் நடந்தன. அந்த ஒரு மாணவனைத் தவிர அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தார்கள். அவன் மீது தன் கோபத்தைக் கக்கினார் அந்த கண்டிப்புக்குப் பேர்போன ஆசிரியை. அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மிரட்டலோடு அது நிறைவுற்றது.

      அதற்கடுத்த தேர்வில் அந்த மாணவனது நிலை மேலும் மோசமானது. அவனது ஒவ்வொரு அசைவிலும் சோகம் இழைந்தோடிக் கிடந்ததது. ஆனால் அந்த ஆசிரியையின் கண்களும், காதுகளும் பாடத்தைத் தாண்டி சென்றதேயில்லை. அவன் தேர்வு எழுதிய தாள்கள் அவனது மதிப்பெண்களை அள்ளித் தரவில்லை;ஆனால் அந்த ஆசிரியையிடமிருந்து வசவுகளை அள்ளி அள்ளித் தந்தது. இந்த வசவுகள் அவனுள் எந்த விளைவையும் உண்டாக்கியதாகத் தெரியவில்லை. ஆனால் அவனது சோகம் இழைந்தோடும் முகத்தில் மேலும் சோக இழைகளை அதிகரித்தவண்ணம் இருந்தது.

      அந்த கண்டிப்பான ஆசிரியைக்கு தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த குறிப்பிட்ட மாணவனின் மதிப்பெண்கள் பற்றிய விசாரிப்பாகவே அது அமைந்தது. ஆசிரியை அந்த தத்தி மாணவனைப் பற்றி குறைகளை அடுக்கினார். அமைதியாக அனைத்தையும் கேட்ட தலைமை ஆசிரியை தான் முன்பே எடுத்து வைத்திருந்த அம்மாணவனது சென்ற வருட மதிப்பெண் பட்டியலையெல்லாம் எடுத்து இந்த வகுப்பாசிரியைப் பார்க்குமாறு கூறினார். மிக நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்தான். இது அந்த ஆசிரியைக்கு அதிசயமாக இருந்தது. இந்த தத்தி மாணவனுக்கு இது எப்படி சாத்தியமென எண்ணினார். தலைமையாசிரியை இந்த மாணவன் நன்கு படிக்கக்கூடிய மாணவனென்றும் அவனுக்குள்ள பிரச்சினை என்ன என்பதை கண்டுணர்ந்து அதனைக் களைந்து அவனுக்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.
     
      அன்று பள்ளி வேலைநேரம் முடிந்து அனைவரும் வீடு திரும்பும் தருணத்தில் ஆசிரியை அந்த மாணவனிடம் தனித்து பேசத் துவங்கினார். பேசத் துவங்கிய சிறிது நேரத்தில் அவன் சென்ற வருட விடுமுறையில் அவனக்கு எல்லாமாக இருந்த  தாயை இழந்தது அவனை மிகப் பெரிய துயரத்தில் தள்ளியுள்ளது என்பதை உணர்ந்தார். அப்பொழுது அவருக்குள்ளிருந்த நேயம் தூண்டப்பட, கவலைப்படாதே, இனி நான் உனக்கு தாய் என்று எண்ணிக் கொள். உனது கவலைகளை, பிரச்சினைகளை என்னோடு பகிர்ந்து கொள் என ஆதரவோடு கூறினார். இதுகாறும் அவர் மாணவர்களோடு பேசி வந்த தோரணைக்கு முற்றிலும் மாறானது இது. ஆசிரியையின் இந்தப் பேச்சு ஓரளவுக்கு மாணவனது மனத்தினில் மாற்றத்தை உண்டு பண்ணியது.

      மறுநாள் காலை பள்ளிக்கு வந்த மாணவன், தான் கொண்டு வந்திருந்த ஒரு பழைய கடிகாரத்தை ஆசிரியைக்கு அன்பளிப்பாக அளித்தான். அது தன் தாய் அணிந்திருந்ததாகவும், இதனைக் கண்ணுறும்போதெல்லாம் தன் தாயை காணும் உணர்வு ஏற்படுவதாகவும் அவன் கூறினான். எனவே நீங்கள் இதனை அணிந்து கொண்டால் நான் உங்களிடம் முழுமையாக என் தாயை காண்பேன் என்றான்.உடனே ஆசிரியை தான் அணிந்திருந்த நல்ல கடிகாரத்தைக் களைந்துவிட்டு, அவனளித்த அந்த பழைய கடிகாரத்தை அணிந்து கொண்டாள். மாணவனின் மனம் எவ்வளவு ஆனந்தப்பட்டிருக்கும் எனச் சொல்ல வார்த்தையில்லை. உங்களால் உணரமுடியும். இங்கு தாய்மை என்ற உணர்வு பேசும் நிகழ்வு ஏற்பட்டது.

      பின்னர் அந்த மாணவன் தனது கற்றலில் நல்ல முன்னேற்றம் கண்டான். அவன் தனது பள்ளிக் கல்வியை முடித்து வெளிநாட்டுக்கு வேலைக்கும் சென்றுவிட்டான். ஆனால் அந்த ஆசிரியை தான் அணிந்திருந்த அந்த பழைய கடிகாரத்தை களையவில்லை. அந்த மாணவனின் தொடர்பு இல்லாதிருந்த போதும் அவளுக்கு அந்த கடிகாரம் மிக முக்கியமானதாக இருந்தது. ஆசிரியைக்குத் தேவையான தாய்மை உணர்வை தூண்டியது மட்டுமல்லாமல் அவளது ஆசிரியைப் பணி மிகச் சிறப்பாக அமைய காரணமாக அமைந்த ஒன்றல்லவா அது.
     
      பல வருடங்கள் சென்று பணி ஓய்வு பெற்றுவிட்ட அந்த ஆசிரியைக்கு ஒரு திருமண அழைப்பிதழ், விமானப் பயணச்சீட்டுடன் வந்து சேர்ந்தது. அழைப்பிதழைப் படித்த ஆசிரியை மாணவன் தன்னை நினைவு கொண்டுள்ளதை எண்ணி சந்தோஷப்பட்டாள். திருமணத்திற்கு சென்ற ஆசிரியைக்கு விமான நிலையத்திலிருந்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல முன்னேற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது. மண்டபத்திற்குச் சென்ற அவருக்குச் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அன்றும் அந்த ஆசிரியையின் கையில் அந்தப் பழைய கடிகாரமே இருந்தது. இதனைக் கண்ட மாணவன் மிகவும் நெகிழ்ந்து போனான். தாயின் ஸ்தானத்திலிருந்து அந்தத் திருமணத்தை நடத்திவைத்தார் அவர். இந்தக் கதை மாணவர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் உங்களது உள்ளார்ந்த நேயம் எப்படி வெளிப்படவேண்டும் என்பதைப்புரிந்து கொண்டிருப்பீர்கள்.

      இரண்டாவதாக கர்வமற்ற தன்மை - ஒரு மராத்தி வாசகம் உண்டு. கர்வம் சாதாரண மனிதனை எதுவும் செய்யாது; உறுதியாக அது அறிவுள்ளவர்களையும், அதிகாரத்திலுள்ளவர்களையும் அழித்து விடும். அது அன்பையும், ஈர்க்கும் தன்மையும் உங்களிடமிருந்து அகற்றிவிடும். கர்வமில்லாத தன்மை மிக உயர்ந்த நிலையாகும்.

      மூன்றாவதாக வயப்படுத்தும் தன்மையும் பரவவிடும் தன்மையும் - மாணவர்களை உங்களிடத்தே ஈர்த்து வயப்படுத்தும் தன்மை உங்களிடம் இருக்க வேண்டும். உங்களிடமிருந்து பல உயர்ந்த விஷயங்கள் மாணவர்களிடம் பரவச் செய்பவராக நீங்கள் இருக்க வேண்டும்.

      நான்காவதாக நேர்மறை எண்ணம் - நேர்மறை எண்ணம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாறுதல்களை உருவாக்கும்.

      ஐந்தாவதாக அணுகும் முறை - ஒவ்வொருவரிடமும் அணுகும் முறை அற்புதமான நிகழ்வாக அமைய வேண்டும். மூத்த ஆசிரியர்கள் புதிய ஆசிரியர்களிடம் இடைவெளி இருக்க வேண்டும், அப்பொழுதுதான் மரியாதை கிடைக்கும் என்ற எண்ணத்தினைக் கைவிட வேண்டும். கரியும், வைரமும் கார்பன் என்ற ஒரே பொருளாலானது. ஆனால் இரண்டையும் அணுகும் விதம் வேறுவேறானது. இளையவர்கள் உங்களிடம் வைரத்தை அணுகுதல் போல அணுகும் அளவு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறல்லாமல் இடைவெளியை நீங்கள் கைக்கொண்டால் நாட்செல்ல வெறும் இடைவெளி மட்டுமே இருக்கும்;மரியாதை என்பது இருக்காது.

மூத்தவர்களை மதிக்கும் தன்மை - முக்கியமாக மூத்த ஊழியர்களிடம் பழகும்பொழுது அவர்களது அர்ப்பணிப்பையும், நிறுவனத்துக்கு அவர்கள் கொடுத்துள்ள உழைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நினைப்பு அவர்களிடம் ஒரு வித மரியாதையை உங்களுக்கு ஏற்படுத்தும். இந்நிலை மூத்தவர்களுக்கும், இளையவர்களுக்குமிடையே ஒரு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.

      இன்னுமொரு குட்டிக்கதை. ஒரு நல்ல அரசன் இருந்தான். அவனது ஆட்சியில் மக்கள் நல்ல வாழ்க்கையைப் பெற்றார்கள். பொற்காலம் என்றே அதனை அழைக்கலாம். இந்த சூழ்நிலையில் அயல்நாட்டு அரசன் இந்த நாட்டின் மீது படையெடுத்து கைப்பற்றி அவனை நாட்டைவிட்டு ஓடும்படி செய்து விட்டான். நாட்டிலிருந்து தப்பிய அந்த அரசன் காட்டையடைந்து அலைந்து திரிந்தான். ஆடைகள் கிழிந்து, பசியால் வாடி மிகவும் களைப்புடன் ஒரு பராரியைப் போல அலைந்து கொண்டிருந்தான். நல்ல உணவுக்கும், ஆடைக்கும் அவனது மனது ஏங்கியது.

      களைத்த அவன் கால்கள் ஒரு ரம்மியமான சூழலை அடைந்தன. அங்கு கிழிந்த ஆடையணிந்த பல தபஸ்விகள் தியானத்தில் இருந்தனர். மெலிந்த உடல்களைக் கொண்ட அவர்கள் பல நாட்களாக சரியான உணவில்லாதவர்கள் போலக் காணப்பட்டனர். மிகுந்த பசி கொண்ட அரசனுக்கு அவர்களது நிலையும், அரசனாக இருந்த இவனது நிலையும் அவர்களிடம் உணவினை யாசிக்க தயக்கம் கொள்ள வைத்தது. ஆனால் பசி அவன் தயக்கத்தைத் தள்ளி அவர்களிடம் யாசிக்க வைத்தது.

      மூத்த தபஸ்வி அருகிலிருந்த மரத்தைக் காட்டி, இது கல்ப விருக்ஷம்; இதனிடம் உனக்குத் தேவையானதைக் கேள் என்றார். தயங்கினாலும் அவன் நிலை அவனை மரத்திடம் யாசிக்கச் செய்தது. அது அவனுக்குத் தேவையான உணவினை அளித்தது. பசி நீங்கிய அவன் நல்ல ஆடையினை யாசித்துப் பெற்றான். அமைதியடைந்த மனது யோசித்தது. ஏன் நமது அரசினை யாசித்தால் என எண்ணி அதனைச் செய்தான்.

      உடனே நாட்டைக் கைப்பற்றிய அரசன் அவன் முன்னே தோன்றி, மக்கள் உன் மீது மிக நேசமாக உள்ளனர்; நீ மிகுந்த நல்லாட்சி செய்துள்ளாய்; மக்கள் நீ ஆட்சி புரிவதையே விரும்புகின்றனர்; எனவே நீ உனது நாட்டை மீண்டும் பெற்றுக் கொண்டு ஆட்சி புரிவாயாக எனக் கூறினான்.

       நாடு திரும்பிய அரசன் ஒரு வாரத்திற்கும் மேலாக நின்று போயிருந்த அலுவல்களை செய்து நிர்வாகத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தான். நிர்வாக அலுவல்கள் அவனுக்கு சிறிது ஓய்வளித்த போது அவனது மனம் பழைய நிகழ்ச்சிகளை அசை போடத் துவங்கியது. எல்லாவற்றையும் அளிக்கவல்ல கல்ப விருக்ஷம் இருந்தும் ஏனிந்த தபஸ்விகள் நல்ல ஆடையில்லாமலும், அதிக உணவில்லாமலும் வாழ்கின்றனர் என அவன் மனம் எண்ணி அதிசயத்தது. விடை கிடைக்காமல் தவித்த அவன் தபஸ்விகளின் இருப்பிடம் நோக்கிச் சென்றான். 

      மூத்த தபஸ்வியிடம் தன் கேள்வியை முன்வைத்தான். நாங்களனைவரும் செய்த, செய்கின்ற தபஸினால் இந்த விருக்ஷம் இந்த சக்தியைப் பெற்றுள்ளது. இது இல்லாதோருக்கும் தேவையிருப்போருக்கும் கிடைக்கவே செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து நாங்கள் பெற்றுக் கொண்டு வாழ்ந்தால் இவ்விருக்ஷம் அந்த சக்தியை இழந்து விடும் என்றார். தபஸ்விகளின் தன்னலமற்ற அர்ப்பணிப்பினை எண்ணி அரசன் மிகவும் மகிழ்ந்தான். தனது ஆட்சியில் இன்னும் சிறப்பாகத் தன்னலமற்று நல்லாட்சி செய்தான்.

      இந்த ஆசிரியர் சமுதாயம் அந்த தபஸ்விகளைப் போலிருந்து, கல்பவிருக்ஷமாக மாணவர்களை உருவாக்கி, இந்த தேசத்தினை எல்லா துறையிலும் மேம்படச் செய்ய உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.