சனி, 7 மார்ச், 2015

பெண்மணி என்பவள் கண்மணி


இயற்கையின் படைப்பில் அனைத்தும் உன்னதம்.அது தன் படைப்பில் பல்வேறுபட்ட இயல்புகளை எங்கணும் பரவி வியாபித்து இருக்கச் செய்துள்ளது. ஒவ்வொன்றும் அதன் இயல்பில் மாறுபட்டே, இதில் எது உயர்வு? எது தாழ்வு? அனைத்தையும் இயற்கை ஒன்றென பாவித்தே படைத்திருக்கும். ஒரு நந்தவனம் ரோஜா மலர்களால் மட்டுமே நிரம்பியிருந்தாலும் ஆனந்தம், ஆயினும் அதைவிட அது பலவித மலர்களாலும், பலவித நிறம் மணம் இவற்றால் நிரம்பியிருத்தல் இன்னும் ஆனந்தத்தைக் கூட்டத்தானே செய்கிறது.

விலங்குகளோ, பூச்சிகளோ ஒவ்வொன்றும் ஒருவிதம். அதிலும் ஆண் பெண் இரண்டுக்கும் உடல், குணம் வேறுவிதம். அதனதன் இயல்பில் அவை. இதில் எதை உயர்வென்பது தாழ்வென்பது. வண்ணத்துப்பூச்சி மிக அழகானது. அதுபோல பல பூச்சியினங்கள். எல்லாமே சிறிய உருவிலானவை. மயில் பெரிய பறவை, அழகானது. வண்ணத்துப் பூச்சி மயிலின் உருவிலும், மயில் வண்ணத்துப் பூச்சி அளவிலும் ஹாலிவுட் படங்களில் மட்டுமே ரசிக்க இயலும். நேரில் நிச்சயம் சாத்தியமில்லை.

ஆணோ பெண்ணோ அவரவர் இயல்பில் மாறுபட்டே இங்கு உள்ளனர். உடலமைப்பு, குணம் இரண்டுமே இயற்கையால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம். இதில் இரண்டுமே அதனதன் இடத்தில் அதன் இயல்பில் இயங்கும்போதுதானே இயற்கையின் படைப்பு மாறாமல் அதனோடு சுருதி மாறாமல் இயைந்து காண்பதுதானே அழகு. இதில் இரண்டும் சரிநிகர் சமானம்தான் என்று நிறுவவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. சரி ஆண்கள் சமமாகக் கருதுவதில்லை, மதிப்பதில்லை என்றால் நாம் அது அவர்கள் இயல்பு எனப் புறந்தள்ளிவிட இயலாது. ஏனெனில் மனித உயிர்கள் சிந்தனை என்ற ஒன்றைக் கொண்டவை.                                                                                                                                         
உலகம் முழுதும் எப்படியோ, ஆனால் இன்னமும் பாரத தேசத்தில்
குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெண்களிடமே இருக்கிறது. ஒரு ஆணானாலும் அவன் ஒரு பெண்ணுக்குக் குழந்தையே. அவள் தன் மகனை, நாளைய சமூகத்தில் ஆண்மகனாக உலவக்கூடியவனை பெண்மக்களை மதிக்கக்கூடியவனாக வளர்ப்பதில் உறுதி எடுத்துக் கொள்ளலாமல்லவா? இதுகாறும் இருந்த தாய்கள் அப்படி தங்கள் மகனை வளர்க்கத் தவறியவதாகவே எடுத்துக் கொள்வோம், ஆனால் ஒரு குழந்தையை உருவாக்கும் அதிகாரம் இன்னமும் பெண்களிடம் தானே இருக்கிறது.
குடும்பப் பொறுப்பு பெண்ணுக்கு மட்டுமா, ஆணுக்கு இல்லையா என்றொரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஆண் குழந்தைகளை கவனித்துக் கொள்ளட்டுமே; நான் வேலைக்குச் செல்கிறேனே. வேலைக்குச் செல்வதில் தவறில்லை. குடும்பப் பொறுப்பு என்னும் அதிகாரத்தை நீ இழந்தால் நாளைய சமுதாயம் மேலும் சீரழிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறாய் சகோதரி. பெண்களை மதிக்கத் தெரியாத ஒரு ஆண்மகன் உருவாகிவிட்டால் அது நாளைக்கு பெண்சமுதாயத்துக்குத் தானே பாதிப்பு என்பதை உணர்ந்து கொள்.

பெண்மையின் மென்மைதான் இயல்பு; அது உன்னதமான ஒன்று. அது உன் பணிகளாலோ, எதன் காரணமாகவோ தொலைந்துவிடக்கூடாது. அதே நேரத்தில் மனோசக்தி பெண்மையைப் போல் ஆண்களுக்கு கிடையாது. பதுங்கிய புலி போன்றது பெண்ணின் உள்ளுறை சக்தி. அணுவுக்குள் அடைபட்டிருக்கும் சக்தி போன்றது. அது உள்ளுறைந்து இருக்கும் வரை பல சாம்ராஜ்யங்களை உருவாக்கும் சக்தியாய் திகழும் அது தன் இயல்பை மாற்றும் முகத்தான் சிதறி விடக்கூடாது.

பெண்ணின்றி படைப்பில்லை. ஆண் படைப்புக்கு உறுதுணை அவ்வளவுதான். ஆனால் அந்த படைப்பை முழுமையாய் ஆக்குபவள் பெண்தான். படைப்பு பெண்ணின் மிகச்சக்தி வாய்ந்த இயல்பு. அதனால்தான் படைக்கும் கடவுளைப் படைத்ததும் பெண்ணாய் இந்த தேசம் கருதியது. இந்தப்படைப்பை ஒரு மிகச்சாதாரணமாக பிள்ளைபெறும் இயந்திரம் என்று இயந்திரத்தோடு ஒப்புமைப் படுத்திப் பேசுவது எவ்வளவு பெரிய மடத்தனம். மிக உறுதியாய் நம்புகிறேன் இந்த வார்த்தை முதல்முதலாக எந்த பெண்மணியிடமிருந்தும் வந்திருக்காது;ஏதாவது ஒரு ஆண்தான் இதைச் சொல்லாடியிருக்க வேண்டும்.

பெற்றவளுக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை என்ற ஒரு சொல்லாடலை நினைத்துப் பாருங்கள். அதைப் படைப்பதற்கு அவள் பட்ட சிரமங்கள் பெண்ணைத் தவிர வேறு யாரும் உணரார். ஒரு ஆணால் நிச்சயம் அதை உணர முடியவே முடியாது. ஒரு பெண் தன் இயல்பை ஆணாக மாற்றிக் கொள்ள முயலும்போதும் இந்தத் தாய்மைப் பண்பு சிறிது சிறிதாக விலகத் துவங்கும். மரபணு மாற்றுப் பயிர் போலேத்தான். மரபணு மாற்றத்தை எதிர்க்கும் எவரும் இதை எதிர்க்கத் துணியார். அதிலும் அதிகமாக ஆண்கள் பெண்ணின் சுதந்திரம் பறிபோகுது என்று கூக்குரலிடுவர். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்.

ஏனய்யா சிந்திக்கத் தெரியாத ஒரு செடியினம் கூட தன் இயல்பிலிருந்து மாறக்கூடாது என்று நினைக்கிற நீங்கள் எங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளச் சொல்வது ஏன் என்று நீங்கள் கேள்வியெழுப்புங்கள். வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்தக் குழந்தை வீட்டிற்கு விலை கொடுத்து வாங்கிய மற்ற பொருள்கள் போலத்தான்.
பெண்ணினை மதிக்கும் குணம் ஆண்களிடம் அருகிப் போயிருக்கலாம். ஏன் பெண்ணிடம் இது ஏற்படவேண்டும். சகமனுஷியை மதிக்கலாமே? கல்பனா சாவ்லாவை அண்ணாந்து பார்க்கும் நாம் நம் அலுவலகத்தில் பாடுபடும் ஒரு கமலாத்தாளையும் ஒரு கணம் நினைத்துப் பார்க்கலாமே. வயலில் வேலை செய்யும் பெண்டிர், சாலைப் பணியில் ஈடுபடும் பெண்டிர், கட்டிட வேலையில் ஈடுபடுபடுவோர் என பாடுபடும் ஒவ்வொரு பெண்டிரும் இங்கு பெண்மணிகளே. அவர்களையும் போற்றுங்கள்.
இந்திய தேசத்தின் இணையில்லா பெண்களை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு துறையிலும் சாதிக்க முடிந்தவர்கள் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சக்தியின் வடிவான நீங்கள் கருணையின் உருவும் நீங்கள் என்பதை மறவாதீர்கள், அன்புக்கு மறுபெயர் நீங்கள், அன்னை, மனைவி, தங்கை, மகள் என பல்வேறு உறவிலும் அன்பினைப் பொழிபவர்கள் நீங்கள். அன்பென்பது உங்கள் இயல்பு. அது உங்களில் பொங்கிப் பெருகத்தான் இந்த உலகம் அன்பென்ற மழையில் நனையும்.

கல்விகள் பலகற்றும் கேள்வி ஞானம் பல அடைந்தும் இன்னமும் உள்ளுக்குள் பயமென்பது ஏன்? உங்களை நீங்கள் உணருங்கள். உங்கள் இயல்புதான் சக்தி வாய்ந்தது. நீங்கள் ஆணின் இயல்புக்குள் புக நினைத்தால் நீங்கள் உங்கள் சக்தியை இழக்க முயல்கிறீர்கள் என்பதை உணருங்கள். நீங்கள் பெண் சிங்கங்களைப் போன்றவர்கள். வேட்டையாடும் சக்தி ஆண் சிங்கத்தை விட பெண்சிங்கத்திற்குத்தான். குடும்பமோ, சமுதாயமோ அதைக் காப்பதும் உருவாக்குவதும் பெண்மையின் இயல்புதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இயந்திரம் போலொரு வாழ்க்கை இனியும் வேண்டாமே என்று முடிவெடுங்கள். அனைத்தையும் இயக்கும் சக்தி கொண்டவர்கள் நாங்கள் என்று நம்புங்கள். சுதந்திரம் என்பது நம் இயல்பை நம் குணத்தை எப்பொழுதும் கொண்டிருப்பதே! அடுத்தவனின் காலணிக்குள் நம் கால்கள் பொருந்தாது. ஆணின் உடைக்குள் பெண்ணினை மறைப்பது அவசியமற்றதே. பெண்ணின் உடையோடு சுதந்திரமாய் வலம் வருதல்தானே சுதந்திரம்? நாம் நாமாய் இருப்பதும் அதுபோல்தானே? இயல்பினை உடைத்தெறிந்து செல்வதல்லவே?  குடிப்பதும், புகைப்பதும் சுதந்திரம் என ஒரு தோழி சென்றால் அவளிடம் தெளிவினை ஊட்டுதல் நம் கடமைதானே? ஆணுக்கு சரிசமம் நாமென்று சிலர் குற்றங்கள் புரிந்திடில் அதை கண்டும் காணாமல் செல்வதா? அது நம் இனமென்று நமக்குள்ளே பாசம்தான் பொங்கிட வேண்டாமா?

ஊரையே மாற்றும் சக்தி உன்னிடம் உள்ளது. உன் சக்தி நீ உணராமல் வாழ்வது நியாயமா? உன் வாழ்க்கை உன்னைச் சுற்றியிருப்போரிடம் நம்பிக்கை உண்டாக்க வேண்டும். உனக்குள்ளே ஏற்படும் நம்பிக்கை ஊருக்கே வழிகாட்டும் உணர்ந்துகொள். உலகிற்கே வழிகாட்டும் நாடாக
பாரதம் ஆகுமா எனில் அது உன்னால்தான் சாத்தியமே அறிந்துகொள். வல்லரசு என்று எத்தனை பேர் பாடினாலும் பெண்ணிங்கு நினைக்காமல் சாத்தியமில்லை. இந்நாடு வல்லரசாகவும் நல்லரசாகவும் ஆக வேண்டுமெனில் பெண்களின் பங்கு அவசியம் என்பதை ஆண்கள் உணர்கிறார்களோ இல்லையோ நீ உணர்ந்து கொள் சகோதரி.

இயற்கையாகவே அழகாய் இருக்கும் உனக்கு செயற்கையாய் ஏற்படுத்தப்படும் அழகெதற்கு? அழகு நிலையங்களில் செயற்கையாய் செய்யும் செயல்களால் உனது இயற்கையான அழகு பாதிப்படையுமே? இயற்கையை அழித்து செயற்கையை புகுத்துவது தாய்மையின் இயல்பல்லவே? தோற்றங்கள் மாறினால் ஏற்றங்கள் வந்திடும் என்கின்ற நினைப்பது வேண்டாமே! உனது பொன்னான நேரம் இந்த நாட்டினை உயர்த்திட பயன்படுமே? சற்றே சிந்தித்துப் பார்.

காதல் என்பது புனிதமானது; அது உனக்குத் தெரிந்திருக்கும். ஆனால் காமத்தோடு திரியும் ஆண்மகனுக்கு அது புரிய நாளாகும். அறியாத புரியாத நபரிடம் அவசரமாய் காதலது வேண்டாமே! வாழ்க்கையில் காலூன்றி நீ நிற்கையில் நிதானமாய் உனக்குள் ஏற்பட்டால் அப்பொழுது சிந்திக்கலாமே அது பற்றி. உன் பெற்றோர்கள் சம்மதம் தந்தால்தான் அந்த காதலும் உன்னதம் என்பதைப் புரிந்துகொள். படைப்பின் வலியறிந்த உன் தாய் மீண்டும் ஒரு வலியடைய பெற்றோரைத் துறக்கின்ற காதலது வேண்டாமே? ஒரு இன்பம் அடுத்தவரின் வலியில் உருவாக வேண்டுமா? நீ பெற்றோராய் மாறும்போது பிள்ளைகள் சம்மதம் தந்தால்தான் திருமணம் என்பதை உணர்ந்து செயல்படு.

உனக்கு உயிர் தந்த பெற்றோரை உதறித் தள்ளிட ஒரு நொடி போதும். ஆனால் மீண்டும் சேர்ந்திட பல வருடங்கள் துடித்திட்ட பலபேரை நானறிவேன். சினிமாவும், தொலைக்காட்சியும், எழுத்தாளர்களும் தங்களின் கற்பனையில் வடிப்பவை அவை கற்பனைக் காதலே. திரையில் தோன்றி மறையும் பிம்பங்கள் போலே அவை. உண்மையின் வலியை உரைத்தால் ரசிக்காது விற்காது என நினைத்து அவர்கள் செய்யும் மாயவியாபாரம் கண்டு ஏமாந்துவிடாதே.

ஜாதகம் ஜோசியம் இவையெல்லாம் சாதகமான சூழ்நிலைக்காக மாறிக்கொள்வதை உணர்ந்துகொள். வாழ்க்கையில் உடன் வருபவன் நம்பிக்கை கொள்பவனாக, நல்லவனாக இருக்க வேண்டும். பணம் பொருள் இவை திருமணத்தை நிச்சயிக்கும் காரணிகளாக இருக்க வேண்டுமா என யோசி. நல்ல வரன் என்பது படிப்பு, பணம், அந்தஸ்து எனக் கொண்டா, நல்ல குடும்பம், நல்ல மனது, நல்ல குணம் என்பதைக் கொண்டா என்பதைச் சற்றே சிந்தித்துப் பார். உனக்காயினும் சரி நாளை உன் மக்களுக்காயினும் சரி எது நல்ல வரன், நல்ல இடம் என்பதை சற்றே துலாக்கோலில் நிறுத்துப் பார்.

புலியினை முறம் கொண்டு விறட்டினாள் என் தமிழ்நாட்டு மறத்தி என சங்கப் பாடல் கூறியது. இன்றைய சினிமாப் பாடல்கள் அவளை வெறும் கனவுக் கன்னியாக, காமப் பொருளாக சித்தரிக்கின்றன. அன்பில்லாதவளாக, அறிவில்லாதவளாகக் காட்டுகின்றன. அவற்றை புறந்தள்ளு.உன் முன்னோரின் உண்மையான வாழ்க்கையையும், சக்தியையும் அறிந்து கொள். அவர்களின் வழி வீறு நடை போட முடிவெடு.



படைக்கும் சக்தி கொண்ட நீ தெய்வத்துக்கு நிகரானவள். ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு புதிது புதிதாக முளைக்கும் சாமியார்களுக்கு முன் நீ உயர்வானவள். அவர் காலடி வீழ்ந்து உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளாதே. கண்டவர் காலில் வீழ்வது படைக்கும் சக்தியான நீ வீழ்வது பாவம் என்று அறிந்து கொள். ஆஸ்ரமங்கள் தேடி அலைவதால் எந்த பயனுமில்லை. உன் இயல்பே தெய்வீகமானது, உனது முன்னோர் தர்மப்படி வாழ்வதைவிட ஆஸ்ரமங்கள் மிகப் பெரும் தர்மத்தை தந்துவிடப் போவதில்லை. நல்ல உள்ளங்களை வணங்குதல் தவறில்லை, புற்றீசல் போல முளைத்து வருபவர்களைக் குறித்துத்தான் எச்சரிக்கை.

இன்று ஊடகங்கள் தோறும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பெண்கள் பயந்து நடுங்குகிறார்கள் என்று உன்னை பயந்தவர்காளாகக் காட்ட முற்படுகின்றனர். உன்னைப் போல் நல்ல தாய் வளர்த்த ஆண்மக்கள் உன்னோடு பாதுகாப்பாய் இருப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தளரவிடாதே. உன்னுள் பொதிந்திருக்கும் வீரமதை தொலைத்துவிடாதே. வீறு கொண்டு எழுந்துவிடு; இங்கு உலகைக் காக்க உன்னைத் தவிர வேறு ஆள் இல்லை விழித்துவிடு.

இன்று நம் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பல பிரச்சினைகளுக்கும் அடிப்படை தொடர்ச்சியான வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, அவர்களின் சிந்தனைகள் நம் கலாசாரத்தை சீரழித்தது, அவர்கள் அடித்த கொள்ளை நம்மை வறுமையில் தள்ளியது. சுதந்திரத்திற்குப் பின்னும் இந்த அரசு சரியான ஆளுமைகளின் கைகளில் இல்லாமல் போனதால் வறுமையின் பிடியிலிருந்து முழுதாய் மீளவில்லை. இப்படி வறுமையின் கோரப் பிடியிலுள்ள பல குடும்பங்கள் வன் எண்ணம் கொண்ட வாரிசுகளை தங்களின் விருப்பம் இல்லாமலே உருவாக்கிவிடுகின்றன. அப்படிப்பட்டவர்களால் பாலியல் பிரச்சினைகள் ஒரு புறம். பணம் படிப்பு இருந்தாலும் வக்கிர புத்தியுடன் அலையும் கலாசாரம் இல்லாத அறியாத அறிவிலிகளினாலும் பாலியல் தொல்லைகள்.
இவை அனைத்திலிருந்தும் மீள்வது என்பது முழுமையான கல்வி, நமது பெருமை, கலாசாரம் உணர்தல் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தல் என்பதன் மூலமே அடையமுடியும். கல்வி ஒன்றே வறுமையை விரட்டும்.
எனவே கல்வி என்னும் வேள்வி எல்லாப் பெண்களுக்கும் கிடைக்க உதவுங்கள். பெண்கள் கல்வியறிவு அடைந்தால் மட்டுமே அனைத்தையும் சீராக்க முடியும்.  



பெண்மணிகள் கண்மணிகள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்களை தாய்மார்கள் உருவாக்க வேண்டும். சமுதாயத்தையும் தர்மத்தையும் காத்து வரக்கூடிய ஒரே சக்தி பெண்கள்தான். தாய்மையே உருவான என் குருவடி பணிந்து பெண்கள் தன் சக்தியினை உணர்ந்து இந்த பாரதத் தாயை பாரினில் உயர்த்திட அருள் தர வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.