வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

விவேகானந்தர் வலியுறுத்திய கல்வி

                எங்களது முதல் குழந்தை நடைபயிலத்தொடங்கிய போதே அவளைப் பள்ளியில் சேர்ப்பதற்கான பேச்சுக்கள் எழத் தொடங்கிவிட்டன. அந்தக் காலகட்டங்களில் நானும் எனது மனைவியும் முழுமையாக அரசுத்துறையில் பணி புரிவதை வெறுத்தவர்கள். எங்களது பெற்றோர்களும், உற்றோரும் மற்றோரும் ஆட்டை மேய்த்தோமோ கோலை போட்டோமான்னு இருக்கிற அரசு வேலைக்குப் போறதை விட வேற என்ன பெரிசு உனக்கு எனக் கேட்டதுண்டு. அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னது ஆசிரியர் தொழிலை. கிரியா ஊக்கமற்ற தொழிலாகவே அதைக் கண்டதுண்டு. ஒரே பாடத்தை திரும்பத் திரும்ப மாணவர்களுக்கு போதிக்கும் வேலையில் என்ன சுவராஸ்யம் இருந்துவிட முடியும் என்ற நினைப்பு மேலோங்கியது. அதில் உண்மையில்லாமலில்லை. 

               எனது மகளை பள்ளியில் சேர்க்க மிகவும் மெனக்கெட்டது எனது மனைவிதான். நகரிலுள்ள அத்துணை பள்ளிகளின் வாசலையும் மிதித்து வந்துவிட்டாள். புதிதாக ஆரம்பித்த ஒரு மாண்டிசோரி பள்ளி மட்டுமே அவளுக்கும் எனக்கும் நம்பிக்கை தந்தது. ஒரு காலகட்டத்தில் அவர்களும் தடம் மாறிட உலகில் எல்லாமும் ஒன்றுதான் என வெறுப்பில் அமிழக்கூடிய சூழல் ஒரு சில நாட்கள் எங்கள் மனதில். ஆனால் எங்கள் முதல் மகள் சேர்ந்த பள்ளியிலேதான் எங்களது இரண்டாவது மகளும் சேர்ந்தாள். அவர்களது பள்ளி நிகழ்ச்சிகளை எந்த ஒரு காரணத்திற்காகவும் நாங்கள் தவிர்த்ததேயில்லை. 

              ஒவ்வொரு முறை நிகழும் எங்கள் பள்ளிப்பயணம் எங்களது சிந்தனையை கல்வியின்பால ஈர்த்துச் சென்றது. எது கிடைக்காது என்று ஆசிரியப் பணி வாய்ப்பைத் துறந்தோமோ அந்தக்கல்வி எங்களது குழந்தகளுக்கும் கிடைக்காத போதுதான், மற்ற குழந்தைகளின் பெற்றோர் ப்டும் துயரம் கண்ட போதுதான் நம்து கல்விமுறையின்பால் எனது சிந்தனையைத் திருப்பியது. எப்பொழுதும்போல் எனது நலம்விரும்பியான எனது மனைவியிடம் இதைப்பற்றி விவாதித்தபொழுது அதற்கு முதலில் நான் நன்கு அறிய வேண்டியது சுவாமி விவேகானந்தர், சுவாமி அரவிந்தர், ரபீந்தரநாத் தாகூர், ஜே.க்ருஷ்ணமூர்த்தி போன்றோரை. இந்தக்காலகட்டத்தில் எனது மனைவி தனது B.Ed, M.Ed ஆகியவற்றை முடித்திருந்தார். 

               தான் படித்த காலத்தில் அங்கு நடத்தப்படும் கல்விமுறையைக் கண்டு மனம் வெதும்பியே இருந்தார். இன்று ஆசிரியர்களுக்கு தங்களது ஆசிரியப் பட்டப் படிப்பிற்குப் பிறகும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு தகுந்த காரணங்களில்லாமலில்லை. அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் முழுமையானதாகவோ, அவர்களை திறன்மிக்க ஆசிரியர்களாக உருவாக்குவதாகவோ அமையவில்லை. இப்படிப்பட்ட ஆசிரியர்கள், மண்ணின் சிந்தனையற்ற கல்வி முறை இதனால் நமது எதிர்காலம் எப்படி அமையப் போகிறதோ என்ற கவலை மிகவும் ஆழமாக மனதுள்ளே எழ ஆரம்பித்துவிட்டது. அதன்பின் எனது மனைவியின் அறிவுரையின்படி விவேகானந்தரை கற்க ஆரம்பித்துள்ளேன். இந்த விஷயத்தில் நான் பள்ளிக்கல்விக்கு முன்னதான நிலையில் இருக்கிறேன். 

                ஏன் கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற பேச்சு எப்பொழுதும் எல்லா தளங்களிலும் எழுந்து கொண்டுதானே இருக்கிறது? புதிதாக என்ன செய்யப் போகிறாய் நீ என்று என்மனம் கேள்வி எழுப்பியது. அது தந்த பதில்; எல்லாம் பேசப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. ஆனால் செயல்படவில்லை;மேலும் சரியானவர்கள் கையில் இந்தப் போராட்டம் இல்லை என்றது. ஏன் போராடுபவர்கள் கல்வியாளர்கள்தானே? அவர்கள் அச் செயலைச் சரியான வழியிலே கொண்டு செலுத்த மாட்டார்களா? என வினவியது என் மனம். அது சரிதானே?

                சிறிதுநாள் அமைதிக்குப் பின்னர் கல்விக்காகப் போராடும் ஒரு நண்பரின் பேச்சினைக் கேட்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் மார்க்சிய சிந்தனையுடையவர் என்பதை அறிந்து கொண்டேன். அவர் பேசிய பேச்சின் சாரம் இதோ;
   
                ”தோழர்களே நான் பணியாற்றும் பள்ளியில் பலதரப்பட்ட மாணவர்கள் பயிலுகிறார்கள்; ஏழைகள் பணக்காரர்கள், கல்வியறிவுடைய பெற்றோர், மற்றும் குறைந்த கல்வியறிவுடையோர்; இந்த மாணவர்களனைவரும் மதிய உணவுக்காக அமர்ந்திப்ருப்பார்கள். அங்கு ஏழை மாணவன் கொண்டு வந்திருக்கும் கருவாட்டை எடுத்துக் கொண்டு அங்கு சைவ உணவு சாப்பிடும் மாணவன் மூக்கினருகே கொண்டு சென்று பாருடா எவ்வளவு அருமையான வாசனை; எவ்வளவு அருமையான உணவு தெரியுமா; என்று கேட்பேன். இப்படி ஒரு இருபது நாட்கள் செய்து அவனை அந்த உணவைச் சாப்பிடச் செய்து விடுவேன். இப்பொழுது அந்த மாணவனுக்கு இந்த ஏழை மாணவன் கொண்டு வரும் கருவாட்டின் மீதோ இந்த மாணவனிடமோ வெறுப்பு தோன்றாது என்றார்.”

                சரி, அவர் நல்லதைத்தானே செய்திருக்கிறார் என்றும், அவருடைய நோக்கம் நல்லதுதானே என்று என் மனம் கேட்டது. நீங்களும் கேட்கலாம். நோக்கம் தவறல்ல; ஆனால் வழிமுறை தவறென்றே எனக்குப் பட்டது. இங்கு மாற வேண்டியது மனித மனம்தானே தவிர உணவுப்பழக்கம் அல்ல. ஒருவனின் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கலாமே ஒழிய அவனை முற்றிலுமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. நல்ல விஷயங்கள் ஒவ்வொருவரிலும் உண்டு. மனிதம் என்பதும் அதுபோலே. ஒவ்வொருவருள்ளும் உறைந்து கிடக்கும் அதனை வெளிக்கொணர முயல வேண்டுமே ஒழிய நமது எண்ணங்களை, பழக்கங்களை திணிக்க முயலக்கூடாது. திணித்தல் என்பது நாளடைவில் எதிர்மறையான விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.

               சரி, இதனை எப்படி அணுகியிருக்கலாம், தம்பீ நீ ஓரளவுக்கு வசதி படைத்தவன்; உனக்கு நல்ல உணவினை உனது பெற்றோர் உனக்கு அளிக்கிறார்கள்; பார் இந்த தம்பியை அவனது பெற்றோர் வசதியற்றவர்கள்; அவர்களுக்கு இதுதான் உணவாகக் கிடைக்கிறது. அதனால் இவர்கள் எந்த வகையிலும் இழிந்தவர்கள் இல்லை. தனக்குக் கிடைத்ததைக் கொண்டு வாழக்கூடிய பெருந்தன்மையும், தன்னம்பிக்கையும் உறுதியும் உள்ளவர்கள். இவர்களைப் போல் உறுதியை நீ பெற வேண்டுமானால் அவர்களை மனித நேயத்தோடு அணுகி அவர்கள் துயர் தீர்ப்பது உனது கடமையென வாழ்ந்தால் நீ எனவே அம்மாதிரியான நண்பர்களோடு நீ பாசமோடு பழகவேண்டும். அவர்களுக்கு உன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இப்பொழுது இங்கு மனம் மாறுகிறது. நாம் ஒருவனை அவனது உணவுப்பழக்கத்தை மாற்றவில்லை; ஆனால் அவனுக்கு சமுதாய பொறுப்பை வழங்கிவிடுகிறோம்.

              என்னதான் வித்தியாசம்? ஒன்று நமது மண்ணில் பிறந்த சிந்தனை; மற்றொன்று வெளியில் இருந்து வந்தது. கல்வி மாற்றங்களை விரும்பி போராட்டங்களை முன்னெடுக்கும் பலர் இந்த மண்ணிற்கு மாற்றான சிந்தனைகளை கொண்டிருக்கின்றனர். அவர்கள் பொதுமேடையில் அவர்களது செயல்பாடுகளை விளக்கமாட்டார்கள், அங்கு பொதுவான விஷயங்களை மட்டுமே பேசுவார்கள். ஒரு கட்டத்தில் அவர் பின்னே நிற்போர் அவர் பேசுவதே சரி என நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவர். அப்பொழுது நமது மாணவ சமுதாயத்தின் நிலை என்னவாகும்? முழுக்க முழுக்க நமது பாரம்பர்யத்தை தொலைத்துவிட்டு அயல்நாட்டு மோகத்திலே மூழ்கிப்போனால் நமது பாரதம் என்னவாகும்? 

              உண்மையில் கீழைநாட்டு சிந்தனைகள் அனைத்தும் மேலைநாட்டு சிந்தனைக்கு வெகு மாறுப்படு இருக்கின்றது. கல்வியைப்பொறுத்த வரையில் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை ஏன் நம் அரசு கைக்கொண்டு செயல்படுத்தவில்லை என்ற கேள்வி பிரம்மாண்டமாய் எழுந்தபோது; அட மடையா, தாகூர் அருமையாக உருவாக்கி வைத்த கல்வி முறையை சீரழித்து அந்த பல்கலையை நாட்டின் மட்டமான கல்விமுறையோடு இணைத்து அவரின் கல்விச் சிந்தனையை கல்லறைக்கு அனுப்பி வைத்தவர்களிடம் இதனை நீ எப்படி எதிர்பார்க்கலாம் என்று எதிர்கேள்வி கேட்டது என் மனம். 

               இன்றைய சூழலில் அரசினை எதிர்பார்த்து காத்துக் கிடந்தோமானால் நாம் நமது சந்ததிக்கு மிகுந்த பாவத்தை இழைத்தவர்களாவோம். மேலும் கல்வித்திட்டத்திற்கான மாற்றமும், மாற்றத்தை விழைகின்ற எண்ணமும் ஆசிரிய சமுதாயத்தினிடையேதான் அதிக அளவில் எழ வேண்டும். இந்த மண்ணின் சிந்தனைகளை மாணவச் சமுதாயத்தினிடையே கொண்டு சேர்க்க வேண்டிய கடமை ஆசிரிய சமுதாயத்திற்குத்தான் உள்ளது. 

               இங்கு இந்த சமுதாயத்தினை எல்லாத் தளத்திலுள்ளவர்களும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனைச் சொல்ல வருந்துகிறேன், இந்தக் குற்றத்தைச் சொல்ல ஆசிரிய சமுதாயத்திற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஏனெனில் சமுதாயம் என்பது ஆசிரிய சமுதாயம் உருவாக்குவது. அவர்களின் பணியே அதுதான். உங்களை, உங்கள் பணிகளை நீங்கள் கண்ணாடியில் காண்பது போல இந்தச் சமுதாயத்தைக் காண்பது. 

                ஒரு மனிதன் அறிகிறான் என்பதைச் சரியான மன இயல் மொழியில் ”கண்டுபிடிக்கிறான்” அல்லது திரையை விலக்குகிறான் என்று சொல்ல வேண்டும். அதுபோலவே ஒரு மனிதன் கற்கிறான் என்பது உண்மையில் அவன் எல்லையற்ற அறிவுச் சுரங்கமாகிய தன் சொந்த ஆன்மாவை மூடியிருக்கும் திரையை விலக்கிக் கண்டுபிடிப்பதையே குறிக்கும்(1.96)

                கற்றலைப்பற்றி மேற்குறிப்பிட்டபடி அருமையானதொரு விளக்கத்தை சுவாமி விவேகானந்தரல்லாமல் யார் உரைக்கமுடியும்.      ஒருவன தன்னையே அறிய இயலாத நிலையில மற்றவற்றை எப்படி அணுக இயலும். உங்கள் மாணவர்களைச் சூழ்ந்திருக்கும் திரையை விலக்க அவர்களுக்குக் கற்றுத்தாருங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் எல்லையற்ற அறிவுச் சுரங்கமாகவே இயல்பாகவே இருக்கிறான். அதனைக் கண்டுணரும் தன்மைக்கு ஒருவனை முன்னெடுத்துச்செல்வதே கற்பித்தல் ஆகும். கற்றல் என்பது என்ன என்பதை அவனுக்கு உணர்த்துங்கள். இதற்கு முன்னதாக விவேகானந்தரின் இன்னும் சில சொற்களை நாம் கவனிக்க வேண்டும்.

                உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பது அல்ல, அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச்செய்வது. (9.191.2)

                 கல்வி என்பது ஏராளமான உண்மைகளை மனத்தில் நிறைப்பதல்ல.மனத்தைப் பூரணமாக்கி முழுவதுமாக அதை அடக்குவதே கல்வியின் நோக்கம்.(2.297)

                 என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பது அல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒரு போதும் தகவல்களைச் சேகரிக்க மாட்டேன்.முதலில் மன ஒருமைப்பாட்டையும், பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின்னர் அந்தப்பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக் கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரு ஆற்றல்களையும் வளர்க்க வேண்டும்.(2.359)

              என்ன அற்புதமாய் சொல்லிவிட்டார். ஒரு மாணவனுக்கு என்ன முதலில் வேண்டும் என்று. ஆனால் இன்று நடப்பதென்ன எவ்வளவு தகவல்கள் தெரிந்து வைத்திருக்கின்றானோ அவனே அறிவாளி என்று. கணினியும், நூலகங்களும் ஏராளமான தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கின்றன. இன்றைய இலக்கணத்தில் உண்மையில் அறிவாளிகள் கணினியும், கூகிள், விக்கிப்பீடியா போன்ற இணையங்களை மட்டுமே குறிப்பிட வேண்டும். ஊடகங்களும் நாடுகளின் பெயர்களை அதன் தலைநகரங்கள் மற்றும் கொடிகளோடு சொல்லக்கூடிய நபர்களை மிகவும் அறிவாளி என்று சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில் அதுதான் அறிவா? மன ஒருமைப்பாடு இல்லையென்றால் எப்படி வெறும் தகவல்களைக் கொண்டு வாழ்வை எதிர்கொள்ள இயலும்? 

             இன்று மன ஒருமைப்பாட்டுக்கான எந்த ஒரு விஷயமும் பள்ளிகளில் இல்லை. உடனே நீங்கள் கேட்கலாம், அரசுப்பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் யோகா கற்பிக்கப்படுகின்றதே. அதனால் அவர்களுக்கு ஆரோக்கியமும் மன ஒருமைப்பாடும் வளராதா? ஊறுகாயினால் ஏதாவது பலனுண்டா என்றால் ஒன்றுமேயில்லை. அந்த நேரத்திற்கு ருசி அளிப்பதைத் தவிர. பள்ளிகளில் யோகா மற்றும் பல நிகழ்ச்சிகள் ஊற்காய் போலத்தான். பாடங்கள் மட்டுமே மிக முக்கியம். இந்த ஊறுகாயும் முக்கியத்துவம் பெரும் எப்பொழுது என்றால், ஆண்டு விழாவிற்கு, அன்று வரும் பெற்றோர்களை தங்களது மாய வலையில் வீழ்த்துவதற்காக பள்ளிகள் இவற்றைப் பயன்படுத்தும். ஆ! என் குழந்தை நல்லா ஆடுறானே! பாடுறானே என்று வருடம் முழுதும் என்ன நடந்தது என்று பாராமல் அந்த ஒரு நாள் கூத்திலே மனம் பறிகொடுத்து செல்லும் ஓர்நிலைதான் இங்கு. 

                இயல்பாகவே எந்தமொழியில் நாம் நமது மனத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோமோ, நமது கோபம்,தாபம், துக்கம், பாசம் இவற்றைத் தெரிவிக்கிறோமோ, அதைவிடப் பலனளிக்கிற வேறுமொழி இருக்க முடியாது. அந்த மொழியின் வேகம் எந்தச் செயற்கை நடைக்கும் வராது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான முக்கிய கருவி,அதன் அடையாளம் மொழியேயாகும். பேச்சு மொழியிலுள்ள இரண்டு சொற்கள் தரும் உணர்ச்சியின் நிறைவை, இரண்டாயிரம் அடைமொழிகளிலும் காண முடியாது. (8.130-2)

               ஆசிரியர் ஒருவரின் பெருமை அவரது மொழியின் எளிமையிலே உள்ளது(10.321)

               வட்டார மொழியின் பெருமையை மேற்கண்டவாறு சுவாமி விவேகானந்தர் இவ்வாறு விளக்குகிறார். இன்று தாய்மொழிக் கல்வி என்பது கேள்வி குறியாய் அல்ல முற்றிலுமே அழியும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தத் துவங்கிவிட்டது. மொழி மட்டுமல்ல, உடை, சிந்தனை அனைத்திலும் நாம் மேற்கத்திய பாணியைக் கைக்கொள்ள முனைகிறோம். உடையைக் கொண்டு யாரையும் இந்தியர்கள் மதித்தது கிடையாது. ஆனால் அந்த நிலை மாறி கோட்டும், சூட்டும் நுனிநாக்கு ஆங்கிலம் மட்டுமே மதிப்பும் மரியாதையையும் பெற்றுத் தரும் என்ற எண்ணம் உண்டாகியுள்ளது. எனது மகள் பள்ளியிலுருந்து வீடு திரும்பியபின்பு அவளின் பாதங்களைக் கண்ணுறும் எனது மனது துடிக்கத்தான் செய்கிறது. இந்த வெப்ப சூழ்நிலையில் ஷூவும், சாக்ஸும் போட்டு எட்டு மணிநேரத்திற்கு மேல் அந்த பூப் போன்ற பாதங்கள் படும் வேதனையை யாரும் உணர இயலாதவர்களா? டை என்ற ஒன்று கழுத்தை இறுக்கி வேதனையை மேலும் அதிகரிக்கும். மொழியின் மீது மரியாதை இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆனால் அனைத்து பெற்றோரும் இதனை உணர்ந்திருக்கின்றனரா என்பது சந்தேகமே!


              சிறந்த குணத்தை உருவாக்குகின்ற, மன வலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, ஒருவனைச் சொந்த கால்களில் நிற்கச் செய்கின்ற கல்வியே தேவை(6.326)

               சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி, அதைக் கல்வி என்று சொல்ல முடியுமா? ஒருவனைத் தன் சொந்தக் கால்களிலேயே நிற்கும்படிச் செய்வதே உண்மையான கல்வி(6.125)

               குணம் குப்பையிலே என்று கவிஞன் பாடிச் சென்றுவிட்டான். குணத்தை நாம் மதிப்பதேயில்லை. தனிப்பட்ட முறையில் நாம் குணத்தை எதிர்பார்க்கிறோம் அது நமக்குத் தேவையாயிருக்கும் எனில். அது நம்மிடம் இருக்கிறதா என்றும் யோசிக்க மாட்டோம். பணம் இருந்தால் போதும், குணம் இல்லையென்றாலும் கொண்டாடத் தயங்கமாட்டோம். எத்தனை ஆசிரியர்கள் குணமில்லாத மனிதர்களை போற்றிப்பேச வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். அவர்களை எதிர்க்க வேண்டாம். புகழாமலாவது இருக்கலாமல்லவா? என்ன செய்வது என் தலைவிதி என்று நொந்துகொண்டே இந்தச் செயலை செய்து விடுவோம். கல்வி பயிலும் மாணவனிடத்தே குணங்களின் தன்மை, பெருமைகள், அவசியம் கற்பிக்கப்படுவதில்லை. 

               சிறந்த குணம் மட்டுமே மன வலிமையை உருவாக்கும். குணமற்றவர்களிடம் நரியின் தந்திரபுத்தியே மேலோங்கி நிற்கும். அது மனவலிமை குன்றிய ஒன்றே. 

               சொந்தக் கால்களில் நிற்கும்படிச் செய்ய வேண்டும் என்கிறார். உண்மையில் நடப்பது என்ன? சிறு குழந்தைகளின் பாடங்களுக்கு என்ன வினாக்கள், அதற்கான விடைகள் என்ன என்று சொல்லிக் கொடுத்த கிளிப்பிள்ளைகளாக உருவாக்குகிறார்கள். தான் கற்றுக்கொள்ளும் விஷயத்தை தானே விளக்க இயலாதவர்களாக அவர்கள் உருவாகும்போது அவர்களால் எப்படி சொந்தக் கால்களில் நிற்க இயலும்? எப்பொழுதும் தங்கள் செயல்களுக்கு அடுத்தவர்களைச் சார்ந்து செயல்படும் அவர்களுக்கு சிங்கம்போன்ற தைரியம் எப்படிக் கிடைக்கும்? 

               வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளவேண்டிய சூழல்களைப்பற்றிய அறிவு மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதைக்கற்றுக்கொள்ள தூண்டப்படுவதில்லை. நான் வருந்துகின்றேன் எனது வீட்டில் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலைக்கும் நான் யாராவது ஒருவரைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழல். ஒரு சிலரைத் தவிர அநேகர் இந்தப் பிரச்சினையினால் அவதியுற வேண்டியதாயிருக்கும். இதற்குக்காரணம் இவையெல்லாம் கற்கப்படவேண்டிய ஒன்றாகவே நான் நினைத்ததில்லை. 

               தமக்குத் தாமே உதவிக்கொள்ளுமாறு மக்களுக்குப் பயிற்சி தராவிட்டால், உலகின் செல்வம் அனைத்தையும் சேர்த்தாலும் ஒரு சிறிய இந்தியக் கிராமத்திற்குக்கூட உதவி செய்ய முடியாது. நமது பணி முக்கியமாக கல்விப் பணியாக இருக்க வேண்டும்; ஒழுக்கம், கல்வியறிவு இரண்டையும் அது புகட்ட வேண்டும்; அப்படிச் செய்தால் அல்லவா, அந்த மக்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக, சிக்கனம் மிக்கவர்களாக, திருமணம் செய்யாதவர்களாக இருந்து, வருங்கால பஞ்சங்களிலிருந்து தங்களைப் பாதுகாக்கக் கற்றுக் கொள்வார்கள்! (11.74)

              விடுதலை பெற்றதிலிருந்து அதிகாரங்கள் கிராமப் பஞ்சாயத்திலிருந்து, மத்திய அரசை நோக்கிச் சென்று விட்டது. தங்களது தேவைகளை தாங்களே செய்து கொண்டிருந்தவர்கள், ஏரியைத் தூர்வாரவும், வாய்க்காலைச் சீரமைக்கவும் அரசை நம்பிக் கொண்டிருப்பவர்களாக மாற்றப்பட்டார்கள். கல்வி இதனைத்தான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. சிக்கனம் என்பதிலிருந்து எப்படியெல்லாம் பணத்தைச் செலவு செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஒழுக்கம் குறைவதற்கான செயல்களாக ஊர்தோறும் மதுச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று உலக வங்கியில் கடன் வாங்கி நம் வாய்க்கால்களையும், ஏரி குளங்களை அரசாங்கம் தூர் வாரிக் கொண்டிருக்கிறது. அந்தக் கடன் சுமை ஒவ்வொரு குடிமகனின் தலையிலும். இதை அறியாது ஏதோ அரசாங்கம் நமக்கு ஏவல் செய்வது போல நினைத்துக் கொண்டு அரசு செய்யட்டுமென்று காத்திருக்கின்றான் ஒவ்வ்ருவனும். இன்னமும் முற்றிலுமாக இந்தியக் கிராமங்கள் எந்த நன்மையையும் பெற இயலவில்லை இத்தனை ஆண்டுகளில். எவ்வளவு தீர்க்க தரிசனமான வார்த்தைகள் சுவாமி விவேகானந்தரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. 

             இனியாவது மாணவர்களை தம்சொந்தக் கால்களில் நிற்கப் பழக்குவோம். இதற்கு அரசு கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வருமென்று காத்திருக்க வேண்டாம். ஆசிரியர்களாகிய நீங்கள் உங்களால் எவ்வளவு செய்ய முடியுமோ அதைச் செய்து மாணவ சமுதாயத்திற்கு விவேகானந்தர் வலியுறுத்திய உண்மையான கல்வி கிடைக்கச் செய்யுங்கள். அதற்கு நீங்கள் முன்னுதாரணமாய் திகழுங்கள். அந்த ஆசிரியரைப் போல் நான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாணவனிடத்தே தோன்றச் செய்யுங்கள். 

(திருப்பூர் பார்க் கல்லூரியில் தேசிய சிந்தனைக் கழகம் நடத்திய விவேகானந்தர் 150-வது ஜெயந்தி விழாவில் ஆற்றிய உரையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்)

வியாழன், 20 பிப்ரவரி, 2014

அரசியலா? மனிதாபிமானமா?

      ”தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” இது வள்ளுவன் தந்த தெய்வ வாக்கு. ஒரு முறை தூக்கில் தொங்கியிருந்தால் அந்த ஒரு நொடி வலியோடு ஒருவரது வாழ்வு முடிந்து போயிருக்கும். குற்றவாளிகளுக்குத் தண்டனை என்பது அரசியல் சட்டப்படி எழுதி
வைக்கப்பட்ட ஒன்று. இது வள்ளுவன் வாக்கல்ல எக்காலத்தும் பொருந்தி நிற்க! காலத்தின் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடிய ஒன்று.
      முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றப்படாமல் கருணை மனுவின் மீதான நடவடிக்கையின் முடிவை மத்திய அரசு கிட்டத்தட்ட பதினோரு ஆண்டுகள் தாமதித்து மறுக்கப்பட்டதன் விளைவாக உச்ச நீதிமன்றம் அவர்களது தூக்குத் தண்டனையை ரத்து செய்துள்ளது.
      உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றே. மிக மோசமான நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்ட சவுக்கடியாகவே இதனைக் காண வேண்டும். தேசியக் கட்சியினைச் சார்ந்த ஒருவர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசும்போது தாமதம் செய்வது ஒரு நிர்வாகயுக்தி என்பது போலப் பேசினார். ஆனால் இந்தத் தீர்ப்புக்குப்பின் என்ன நிலைப்பாட்டை அவர் எடுப்பார் என்பது தெரியவில்லை.
      அப்துல் கசாப் செய்த பயங்கரவாத செயலுக்கு எதிரான வழக்கு, அப்சல் குருவின் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு இவைகளில் காட்டப்பட்ட தாமதம் மக்கள் மன்றத்தில் ஓர் எதிர்ப்பலையை உருவாக்கியது. தேர்தல் நேரத்தில் தங்கள் வெற்றியை பாதிக்கும் என்ற அச்சத்தில் அவர்களது குடும்பத்தாருக்கும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவற்றைப்போன்றே மிகவும் பயங்கரமான செயலே முன்னாள் பிரதமர் ராஜீவ் அவர்களின் படுகொலை. அது தவறுதலாக நடைபெற்ற துன்பியல் நிகழ்வு என்று விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். 
      


            ராஜதந்திரம், வெளியுறவுக் கொள்கை போன்ற விஷயங்களுக்காக தாமதமோ, விரைவோ காட்டப்படும் எனில் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மக்களின் உணர்ச்சிக்கும், தங்களது ஓட்டுக்காக அரசு சில விஷயங்களை தள்ளிப்போடுவதையோ, அலட்சியப்படுத்துவதையோ ஏற்றுக் கொள்ள இயலுமா? இங்கு முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் இந்த அரசியல் நாடகங்கள் நிறைய நடந்தேறியுள்ளது என்ற ஐயப்பாடு அனைத்துத் தரப்பிலும் எழுந்துள்ளது.
     
      மரணதண்டனை விலக்கப்பட்டது நியாயம் என்று வாதிடும் அதே தருணத்தில் அவர்கள் விடுதலையை மாநில அரசு பரிசீலிக்கலாம் என்று நீதிமன்றம் அறிவித்த உடனே விடுதலையை சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவிக்கின்றார். இது மனிதாபிமான செயலாகப்
பார்க்கப்படுகின்றது. ஆனால் சட்டமன்றத்தில் அவரது பேச்சில் திரு. கருணாநிதியின் அமைச்சரவை இவர்களின் விடுதலையை நிராகரித்தது என்றும், தமது அமைச்சரவை அவர்களை விடுதலை செய்வது என்று எடுத்த முடிவையும் ஒப்பிட்டு கருணாநிதி தமிழர்களுக்கு எதிரானவர் என்ற எண்ணத்தை வலுப்படுத்த முனைகிறார். 
      இன்னும் சில மாதங்களிலே பாராளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதில் தமது வெற்றியை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை என்ற ஐயப்பாடு எழாமலிருக்க முடியாது. ஏனெனில் திரு. ராஜீவ் அவர்களின் மரணத்திற்கு விடுதலைப் புலிகளையும், தி.மு.க வையும் குற்றம் சுமத்தியவர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை சென்ற சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை எடுத்தவர் இப்படி மாறிப்போக தேர்தல் கணக்கு தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
      திரு.கருணாநிதியின் அமைச்சரவை ஒரு வேளை இவர்களின் விடுதலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்குமேயானால்,
நிச்சயம் எதிர்ப்புகுரல் முதல்வரிடமிருந்து அந்த காலகட்டத்தில் வந்திருக்க வாய்ப்பு அதிகமே! தி.மு.க விற்கு விடுதலைப்புலிகளோடும், திரு. ராஜீவின் கொலையோடும் உள்ள உறவு இதன் மூலம் உறுதிப்படுவதாக அறிவிப்பு வெளியாயிருக்கும். ஆனால் தி.மு.க இன்று எதிர்ப்பு நிலையை எடுக்க இயலாத நிலையில் இருக்கிறது. தி.மு.க மட்டுமல்ல, பாரதிய ஜனதா, ஏன் தமிழக காங்கிரசும் இதனை வலுவாக எதிர்க்க திராணியில்லாமல் இருக்கின்றன.
      என்ன காரணம் தமிழ்தேசியம் என்ற எண்ணம் மக்களிடையே வலுத்திருக்கிறதா? விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு தமிழக மக்களிடையே வலுத்திருக்கிறதா? நிச்சயமாக இப்படி இருக்க வாய்ப்பில்லை. தமிழ்தேசியம் பேசும் தமிழ் பிற்போக்குவாதிகள் வேண்டுமானால் இப்படி நப்பாசையில் பேசிக்கொள்ளலாம். இன்னமும் தமிழக மக்களுக்கு தேசிய எண்ணமே மேலோங்கியிருக்கும். பின் என்னதான் ஆயிற்று? தமிழக அரசியல்வாதிகள் இந்த விடுதலையை எதிர்க்காமலிருக்க?
      நிச்சயமாக இதன் பின்புலம், முள்ளிவாய்க்கால் படுகொலை, தமிழர் இனத்தின் மீதான தாக்குதல் அதன் பின்னே மத்திய அரசின் கரம் இருக்குமோ என்ற ஐயப்பாடு. இது மட்டுமா? தமிழக மீனவர்களின் மீதான தொடர்ச்சியான இலங்கையின் தாக்குதல், கூடங்குளம் அணுமின்நிலையம், மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் அளிக்க மறுப்பு, கெயிலின் விவசாயிகளிடத்தே மோசமான அணுகுமுறை, தொடர்ச்சியாக தமிழகம் பல துறைகளிலும் புறக்கணிக்கப்படுவது, தமிழக மக்களின் குரலை கவனிக்காதது போன்ற தவறுகளை மத்திய அரசு செய்து வருவதால் மக்களிடையே ஒரு எதிர்ப்பு நிலை உருவாகி உள்ளது.
      முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு மாணவ மற்றும் தமிழ் சமுதாயத்தினிடையே ஏற்பட்ட ஒரு அதிருப்தி, இன்று அரசியல்வாதிகளை திரு.ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகளை எதிர்க்க இயலாமல் கட்டிப்போட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடாக திருப்பிவிடக்கூடியவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அது தங்கள் தேர்தல் கணக்கில் பாதிப்பை உண்டாக்கிவிடும் என்ற அச்சம் அனைத்து அரசியல் கட்சிகளையும் நடுநிலைமையோடு பேச இயலாமல் செய்துள்ளது.
      சரி, இந்த விடுதலை ஏன் எதிர்க்கப்படவேண்டும். இவர்கள் முன்னாள் பிரதமரின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இவர்கள் நிரபராதிகள் என்று கூக்குரலிடுவோர் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் உண்மைக் குற்றவாளி இவர்தான் என்று ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இன்றுவரை ஏதும் முயற்சி செய்திருப்பார்களா என்பது சந்தேகமே! அவ்வாறு நிரூபிக்க வேண்டிய கடமையும், உரிமையும் இவர்களுக்கு இருக்கிறதே? ஏன் இன்று வரை செய்யவில்லை? வெறுமே விடுதலைப்புலிகளை கடுமையாய் எதிர்ப்போரை இதில் சம்பந்தப்படுத்திப் பேசுவதனால் யாதொரு பயனுமில்லை.
      ஆனால் இப்படியொரு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவராக விடுதலை செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டால் குற்றவாளிகளை  விசாரிக்க நீதிமன்றங்கள், எதற்கு? தண்டனைச் சட்டங்கள் ஒன்று எதற்கு? பிரதமரைக் கொன்ற குற்றவாளிகளையே விடுதலை செய்கிறீர்கள், சாதாரண மீனவனைக் கொன்றவர்க்கு விடுதலை தரவேண்டாமா என்று இத்தாலிய அரசாங்கம் கேட்காதா? கேட்டால் உடனே விடுவிக்க வேண்டும் என்று சாந்தன், பேரறிவாளன் விடுதலையை ஆதரிப்போர் ஆதரவு தெரிவிப்பார்களா?
      யார் வேண்டுமானாலும் இந்திய மண்ணில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அவர்கள் எம் தமிழ் இனத்தார் என்றால் ஆதரிப்போம், இல்லையெனில் அவர்களுக்கு அரசியல் சட்டப்படி தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று கூறுவார்களா? இப்படி ஒரு நிலைப்பாடு நமது நீதியையும், தர்மத்தையும், நமது நடுநிலைமையையும், தமிழ்ப்பாரம்பர்யத்தின் தன்மையயும் கேள்விக்குறியாக்கிவிடாதா?
      மீண்டும் சொல்கிறேன், சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றால், அதனை அவர்களும் அவர்களை ஆதரிப்போரும் நிரூபித்து விடுதலையைப் பெறவேண்டுமே ஒழிய இப்படி ஒரு வழிமுறையில் அல்ல. அதே நேரத்தில் அவர்களது மரணதண்டனையை கருணை மனுவின் மீதான தாமதத்தைக் காரணமாய் காட்டி விலக்கியிருப்பதை மனதார வரவேற்கிறேன். ஒரு தமிழரின் தலைமையிலான உச்சநீதிமன்றக்குழு இந்த ஒரு அருமையான தீர்ப்பினை வழன்கியிருக்கிறது. இது ஒரு வரலாற்றுப் பதிவாய் அமைகையில் ஒரு தமிழர் அந்த இடத்தில் இருப்பது பெருமையான விஷயமே! 
 அவர்களின் விடுதலை திரு. ராஜீவ் குடும்பத்தாரின் மன்னிப்பின் அடிப்படையில் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் நடந்தால் நிச்சயம் அது அர்த்தமுள்ளதாய் இருக்கும். இங்கு ராகுல் முன்னாள் பிரதமரைக் கொன்ற குற்றவாளிகள் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார். 
      முடிவில் எனது இன்னுமொரு ஐயப்பாட்டை இங்கு எழுப்ப விழைகின்றேன்; நிச்சயம் குழப்புவதற்கல்ல! தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்; ஒரு வேளை இவர்களின் வாழ்வை சூது கவ்வியிருந்ததோ, இன்று தர்மம் வென்றுவிட்டதோ? கண்ணனன்றி வேறே யாரறிவார்? அனைவர்க்கும் அவனே அறிவிப்பான்! அதுவரை பொறுத்திருப்போம். 
     


வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

              2014-தான் முடிவா, உலகம் அழிந்து விடுமா? ஜெபக்கூட்டம் விளம்பரம் கண்டேன். எந்த மதமானாலும் மக்களிடையே இருக்கும் பயம், நாளைக்கு எனக்கு என்ன நடக்கும், கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை வைத்து தங்கள் வியாபாரத்தை நன்கு பெருக்குகிறார்கள். ஜோஸ்யம், பரிகாரம், எண்கணிதம் என பல்கிப்பெருகி இருந்த விஷயங்கள் இன்னமும் உளுத்துப்போகாததைக் கண்ட அனைவரும் மக்களின் பயம், சந்தேகம், அதீத எதிர்பார்ப்பு ஆகியவற்றை பயன்படுத்தி தங்கள் கடைகளை விரிவாக்கம் செய்கிறார்கள். புதிது புதிதாக கிளைகளைத் திறக்கிறார்கள். எத்தனை ஆன்மீக மகான்கள் உதித்த நாடு இது, எத்தனை வேதாந்திகள் உதித்த நாடு இது. அத்துணை பேரும் தன்னம்பிக்கையைத்தானே ஊட்டினர். பாவமோ, புண்ணியமோ விளைவுகளை உனது செயல்களே தீர்மானம் செய்கின்றன என்றனர்.

           ஒரு கணக்கு இருக்கிறது. அதற்கு விடை என்று ஒன்று உண்டு. அந்த விடை எப்படி வரும். அதற்கென்று சில வழிமுறை இருக்கின்றது. ஒவ்வொரு அடியாக அந்த வழிமுறைகளை நாம் செய்து முடிக்கும்போது நம் செயல்களின் பயனாக விடை கிடைத்து விடுகின்றது. விடை என்ன வரும் என்றோ, விடை என்னவாக இருக்கும் என்று எவரிடமோ அறிந்து கொள்ள முயன்றால் உனது செயல்கள் எப்படி சரிவர அமையும்? எனவே கடமையைச் செய் பயனை எதிர்பாராதே என்றது பகவத் கீதை. நமது கடமையைச் சரிவரச் செய்து வந்தால், நல்ல செயல்களைச் செய்து வந்தால் நல்ல விளைவுகள்தானே ஏற்படும். இந்த சூத்திரம் தெரிந்த பின் எதற்காக ஜோஸ்யம், பரிகாரம், உலகம் அழியுமா, அப்படி எனில் நான் பிழைத்துக்கொள்ள இறைவனிடம் உருகி வேண்டுவது என்பதெல்லாம் பம்மாத்து வேலை.

      தன்னம்பிக்கை இல்லாதவன் நாத்திகனாவான். அனைவருள்ளும் இறைத் தன்மை உள்ளது என்கிறபோது ஒவ்வொரு மனிதனும் இறைவனின் துளியே என்கின்றபோது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும். இறைவனின் ஒரு பகுதியான நாம் நாளை என்ன நடக்குமோ என்று பயந்து கோவில் கோவிலாகவோ, ஜெபக்கூட்டங்களாகவோ எதுவானால் என்ன, இந்த எண்ணத்தோடு சென்றால் ஒரு பயனும் இருக்கப்போவதில்லை. மேலும் பயந்தவர்களாகவே மாறப்போகிறீர்கள்.

     நம்பிக்கை கொண்டு நல்ல செயல்களைச் செய்வோம். இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். அவன் கருணை மிகுந்தவன். அவன் எத்தீமைகளையும் நமக்குச் செய்வதில்லை. நமது செயல்களே நமது துன்பங்களுக்குக் காரணமாகிறது.” நமக்காக கோயிலுக்குச் செல்வது ஒரு முறையெனில், மறுமுறை செல்வது மற்றவர் நலனுக்காக மட்டுமே என்று கொள்ளுங்கள்”(இந்த வார்த்தைகள் நெமிலி ஸ்ரீபாபாஜி சொன்னது).

       கண்டவன் காலில் விழுவதும், அவரவர் சொல்லும் பரிகாரங்களை எண்ணி வீண் செலவு செய்து அலைவதனால் யாதொரு பயனுமில்லை. மாற வேண்டியது கிரகங்கள் இல்லை. மாற வேண்டியது மனித மனங்கள்தான். கிரகங்கள் நாளை என்ன நடக்கும் என்று எந்த செயலையும் செய்யப்போவதுமில்லை, நீங்கள் பரிகாரம் செய்வதால் அவைகள் சுற்றுப்பாதையை மாற்றப்போவதுமில்லை. மாற வேண்டியவர்கள் நாம்.

     சூரியனிலிருந்து வரும் ஒளி ஆற்றல் ஒரே மாதிரித்தான் உள்ளது. தாவரங்களின் இலைகள் அதை பச்சையமாக்குகின்றன. எல்லா இலைகளும் பச்சையத்தை தயாரிக்கின்றன. ஆனால் எல்லா மரங்களும் ஒரே வகையான பூவையோ, காயையோ உண்டாக்குவதில்லையே? ஏன்? ஒவ்வொரு தாவரத்தின் தன்மைக்கு ஏற்ப, செயல்களுக்கு ஏற்ப விளைவுகள் ஏற்படுகின்றன. ஆயின் சூரிய ஒளி ஒன்றுதானே?

    அதுபோல நாம் நமது செயல்களுக்கு ஏற்ப கிரகங்களின் சக்தி நமது வாழ்க்கையில் விளைவுகளை உண்டாக்கும். பரிகாரம் பயனில்லை. பரிகாரம் என்னவென்றால் மனமாற்றம்தான், செயல்மாற்றம்தான். 

     எந்த மகான்களும் தங்கள் வாழ்க்கையில் பரிகாரங்களைச் செய்து கொண்டிருக்கவில்லை. இறைவனை நம்பினார்கள். மனிதர்களிடம் நல்ல சிந்தனையை பரப்பினார்கள். அதன் விளைவுகளை அவர்கள் ஆழ்ந்து அனுபவித்தார்கள். தங்கள் வாழ்க்கையை பாடமாக்கினார்கள். அந்தப் பாடங்களை நாம் துறந்து விட்டோம், மறந்து விட்டோம். வியாபாரிகளின் நயவஞ்சகப் பேச்சில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறோம்.

         ராமனோ, க்ருஷ்ணனோ, யேசுவோ, புத்தரோ அனைவரும் மனிதராகப் பிறந்தவர்கள். ஆனால் அனைவரும் தமது செயல்களின் விளைவாக தெய்வமாய் ஆனவர்கள். இவர்கள் தங்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளவில்லை. தன்னோடு மற்றவர் நலனையும் கருத்தில் கொண்டு தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்து வந்தவர்கள்.

       பரிகாரம் செய்தால் இறைவன் தங்கள் பாவத்தை மன்னித்துவிடுவான் என்றோ, தாங்கள் செய்த பாவத்துக்கு மனமுறுகி மன்னிப்பு வேண்டிவிட்டு, இறைவன் தங்களை மன்னித்து விடுவான், மீண்டும் பாவம் செய்தாலும் மன்னித்து விடுவான் என்று யாராவது உங்களிடம் சொன்னால் அவர் நிச்சயமாக ஆன்மீகவாதி அல்ல, ஒரு வியாபாரி என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். மனமுறுகி மன்னிப்பு வேண்டினால் இறைவன் தன் குழந்தையை மன்னிப்பான், மன்னிப்பு கிடைக்கும் என்று தெரிந்து மீண்டும் மீண்டும் பாவம் செய்தால் மன்னிப்பு கிடைக்கும் என்றால் அது பொய்.


    நான்  செய்கின்ற தவற்றுக்குப் பரிகாரமாக வாரம் ஒருமுறை அன்னதானம் செய்துவிடுவேன், அவர்கள் வாழ்த்துவதால் என் தவற்றுக்கு தண்டனை கிடைக்காது என்று நம்பினால் அவனைப்போல் ஒரு முட்டாள் இல்லை. நீ நல்ல எண்ணத்திலோ, ஒருவன் பசியால் வாடுகின்றான் என்றோ அன்னதானம் செய்யவில்லை. உன் பாவக்கணக்கை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே செய்கிறாய். அது தானத்தில் சேராது.

   நான் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறேன் என்று பெருமைப்படுவதோ, கோயிலுக்கு அதைச் செய்தேன் என்று பீற்றிக்கொள்வதோ, இத்தனை உதவிகள் செய்தேன் என்று தம்பட்டமடித்துக் கொள்வதோ தானமோ, சேவையோ அல்ல. அவைகள் புண்ணியக் கணக்கில் சேராது. அவை நீ புகழப் பட வேண்டும் என்ற எண்ணத்தினாலோ, உன் பணவசதியை காட்டுவதற்காகவோ செய்யப்பட்டால் அது பாவமே அன்றி புண்னீயமல்ல.  நீ சம்பாதிக்கும் பணம் எப்படிப்பட்டது? அது எவ்வழியில் உனக்குக் கிடைத்தது? உன் செயல்களே உனது வாழ்க்கையின் பலன்களைத் தீர்மானிக்கும்.

 இனி அன்னதானம் உண்ணப்போகிறவர்கள் யார் அன்னதானம் செய்கிறார்கள் என்று அறிந்தபின் உண்ணச் செல்வது நலம். பாவப்பட்ட கரங்களின் மூலம் பசியாறுவதை விட பட்டினியாய் கிடப்பது எவ்வளவோ மேல்.

      கோயிலில் அர்ச்சகன் ஒரு காலத்தில் இறைவன் எப்படி மனிதர்களிடையே பேதம் பார்க்க மாட்டானோ அப்படியே அவர்களும் நடந்து கொண்டார்கள். அவர்கள் பேச்சில் சத்தியம் இருந்தது. அவர்கள் சொல்லுக்கு மற்றவரிடத்தே மரியாதை இருந்தது. ஆனால் இன்று காசு உள்ளவனுக்கு கூழைக் கும்பிடு, உண்மையான பக்தனுக்காக ஹாரத்தி கூட காட்டுவதில்லை. அதனால் இறைவன் இவனை மதிப்பதில்லை, மக்களும் மதிப்பதில்லை. தன் பெருமையை பறை சாற்ற நினைக்கும் பணக்காரர்களும் அர்ச்சகரும் மட்டும் இடமாகக் கோயில்கள் மாறிப்போனது காலத்தின் கொடுமை. இதனைக் கண்டு இறைவன் கோயிலை விட்டு வெளியேறி  மற்ற உண்மை பக்தர்கள் வசிக்கும் இடம் தேடியும், சேரிகளின் ஓரத்தேயும் ஓடி ஓடி அவர்களைக் கண்டு வருகின்றான், ஆனால் அதை உணராத இவர்கள் இறைவனைக் காண பணக்காரர்களும், அர்ச்சகர்களும் நடத்தும் நாடகம் காண கோயிலுக்கு ஓடுகிறார்கள். பின்னால் கூக்குரலிட்டுக் கொண்டே அழைக்கும் இறைவனை இவர்கள் உணர்வதேயில்லை.

    கடமையைச் சரிவரச் செய்யும், நல்ல செயல்களைச் செய்யும் மனிதர்களிடத்தே இறைவன் நாடி வருகின்றான். அவர்கள் இதயத்தில் குடியேறுகிறான். அதை அறிந்தவர்கள் அறியாமையில் வீழ்வதில்லை.    


      மாறுங்கள் மனிதனாக! மனிதன் என்பவன் தெய்வமாகலாம்! ஆம் உள்ளிருக்கும் தெய்வத்தை உணர்ந்து தெய்வத்துக்கு உரிய குணங்களோடு நம் செயல்களை மாற்றிக்கொள்ளும்போது; மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.