திங்கள், 9 டிசம்பர், 2013

அரையிறுதி - 2013, இறுதிப்போட்டி- 2014


        ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபைத் தேர்தலை ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் 2014 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே சித்தரித்தன. அதற்கேற்றாற்போல தமிழகத்தில் உள்ள கட்சிகளோடு கூட்டணி பற்றிய முடிவை பாஜக தள்ளிவைத்தது. பாஜக தற்போது கடேரிக் கன்றல்ல, சினைப் பசு. கன்று ஈனும் காலத்தில் எவ்வளவு கறக்கும் என்று அனுமானங்கள் துவங்கிவிட்டன. இறுதிப்போட்டியில் wild card round மூலமாக இத்தனை நாள் ஆட்சியில் இருக்கும் காங்கிரசும் தகுதிபெற்று போட்டியிடக் காத்திருக்கிறது.
        தற்பொழுது வெளிவந்துள்ள நான்கு மாநிலத் தேர்தல்கள் சொல்வது என்ன? முதலாவதாக தலைநகர் தில்லியில் நடந்தது என்ன? திரு.அரவிந்த் கேஜ்ரிவாலின் ஏழை மக்கள் கட்சி தனது முதல் போட்டியிலேயே அரைஇறுதிப்போட்டியில் தேவையான மதிப்பெண்களைப் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. ஏன் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்த பொழுது தில்லி மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலில்
மட்டும் ஏழை மக்கள் கட்சி போட்டியிட்டது? இந்த கேள்விக்கான விடை அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கலாம். தில்லியில் உள்ள வாக்காளர்கள் அதிகம் படித்த வாக்காளர்கள். கடந்த வருடங்களில் அன்னா ஹசாரே துவக்கிய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பாதிப்பு தில்லி முழுதும் பரவிக்கிடந்தது. ஆனால் இந்த நிலைமை அதன் அண்டை மாநிலங்களிலோ அல்லது தேர்தல் நடைபெற்ற எந்த மாநிலங்களிலும் காணப்படவில்லை. இந்த மாநிலங்களில் போட்டியிட்டிருந்தால் இந்த வெற்றிக்களிப்பினைப் போல் அங்கும் நடந்திருக்கும் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை.
        எல்லோரும் வைக்கும் குற்றச்சாட்டு அரவிந்த் கேஜ்ரிவால் காங்கிரசின் கைப்பாவை. அதனால் ஏழை மக்கள் கட்சியினால் பலன் அடையப்போவது காங்கிரஸ் என்றே நானும் எண்ணி வந்தேன். அது உண்மையா அல்லது வடிகட்டின பொய்யா என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனாலும் தில்லி மக்கள் முழுவதுமாக ஏழைமக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து விடவில்லை. மேலும் காங்கிரஸ் எட்டு தொகுதிகளில் வென்றிருக்கிறது. அனைவரும் பார்ப்பது காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதனையே. அது இன்னும் முழுவதுமாக நிராகரிக்கப்படவில்லை யாரும் நினைவில் கொள்ளத் தயாராக இல்லை.அரவிந்த் கேஜ்ரிவால் இதனைக் கணித்திருக்கக் கூடும். அதனால்தான் அவரது கட்சி தில்லியில் மட்டுமே போட்டியிட்டிருக்கக் கூடும்.
        இந்தத் தேர்தலில் மோடி அலை வீசிவிட்டது என்று பெருமிதம் கொள்ளும் பாஜகவினர் சுலபமாக aap யின் வெற்றியை மறக்கடிக்க முயல்கிறார்கள். மனதுணர்ந்து சொன்னாரோ, அல்லது இப்பொழுதுதான்
புரிந்து கொண்டாரோ ராகுலின் பதில் இந்த விஷயத்தில் சரியான ஒன்றாகவே நான் காண்கிறேன். சாதாரண மனிதனைக் கவனிக்கத் தவறியதுதான் காங்கிரசின் தோல்விக்கு காரணமென்றும், ஆம் ஆத்மியின் வெற்றிக்கு அது சரியாகச் சாதாரண மனிதனைச் சென்றடைந்ததே என்றும். இதனைப் பாஜக புரிந்து கொண்டதா அல்லது புரியாத மாதிரி இருக்கிறதா?
        இங்குமே தமிழகத் தலைவர்கள் சாதாரண மனிதனுக்கான தேவைகளைப்பற்றி சிந்திப்பதேயில்லை. பாஜகவினரை எடுத்துக்கொண்டால், சிறுபான்மை, மதமாற்றம் அதனால் ஏற்படும் விளைவுகள் இதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது ஈழப்பிரச்சினையை அதிகம் கையிலெடுத்திருக்கிறார்கள். ஆனால் அதில் சரியானதொரு தீர்வு என்னவாயிருக்க வேண்டும் என்று இவர்களால் சொல்ல இயலாது. ஏனெனில் பெரும்பாலான தமிழ் இயக்கங்களின் எண்ணத்திற்கு மாறுபாடான ஒரு கருத்தினை முன்வைக்கக்கூடும். இப்பொழுதுமே காதில் விழும் தகவல்கள் பாஜக திமுகவோடு கூட்டணி அமைக்க முன்னாள் தலைவரும், இன்னாள் தலைவரும் முயற்சிப்பதாகக் கூறுகின்றன. சாமான்ய மனிதன் முதற்கொண்டு பலரும் ஈழத்தமிழர் விவகாரம் முதற்கொண்டு மிகப்பெரிய ஊழல்வரை காங்கிரசை எவ்வாறு காண்கிறார்களோ அவ்வாறே திமுகவையும் காண்கின்றனர். எனக்குத் தெரிந்த இந்த செய்தி பாஜக தலைவர்களுக்குத் தெரியாதா? இது அவர்கள் சாதாரண மனிதர்களைப் பற்றி நினைக்கத் தெரியாத ஒரு மேல்தட்டு மக்கள் என்ற உணர்வை அல்லவா ஏற்படுத்துகிறது.
        ஏழை மக்கள் கட்சி பெற்றுள்ள வெற்றி அவர்களுக்கு மட்டுமல்ல மாற்று அரசியலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். ஓட்டுப் போடாமல் இத்தனை நாளும் வீட்டில் உறங்கியவர்கள் இனி ஓட்டுப்போட முன்வரலாம். நோட்டோவையும் பயன்படுத்தலாம். ஏழைமக்கள் கட்சி புதிய அத்தியாயத்தை துவங்கியிருக்கிறது. பிரபலங்கள், ஜாதி, பணபலம், ஆள்பலம் இதனைத்தாண்டி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனையெல்லாம் யோசித்தாவது பார்த்திருப்பார்களா? தமிழகத்தில் இந்த நிலைப்பாடு சரியானதாக இருக்காது என்று யாராவது சொன்னால் பின்னால் இழப்பு அவர்களுக்குத்தானே ஒழிய எனக்கல்ல.
        ஏழைமக்கள் கட்சியின் வெற்றி மற்ற அரசியல் கட்சிகளையும் சிந்திக்க வைத்தால் நல்ல வேட்பாளர்கள் கிடைக்கலாம். நல்ல அரசியல் மாற்றம் ஏற்படலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை வேட்பாளர்கள் தேர்வில் ஏழைமக்கள் கட்சியை வழியில் தேர்வு செய்வது என்பது மிகச் சிரமமான ஒன்றே. ஏனெனில் இங்குள்ள தலைமைகளுக்கு உண்மைத் தொண்டன் பெயரே நினைவுக்கு வராதே! தொகுதியில் எந்த ஜாதிக்கு செல்வாக்கு, எந்த மதத்தினர் அங்கு அதிகம் உள்ளனர் என்ற எண்ணம்தானே வரும். தமிழக பாஜகவும் இதற்கு விதிவிலக்கல்ல என்றே நினைக்கிறேன். மோடி எங்கோ இருக்கப்போகிறார். இங்கு எனக்கான பிரதிநிதியாக யார் இருக்கப் போகிறார் என்பது ஒவ்வொரு சாமான்யனின் எண்ணமாக இருக்காதா? அதற்கு மதிப்பளிக்க வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமையல்லவா?
        ராஜஸ்தானைப் பொறுத்தவரை ஊழலும் காங்கிரஸ் எதிர்ப்பும் பாஜகவிற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. மோடி அலை அதற்கு உதவியிருக்கும். ஆனால் பெரும்பங்கு என்பது மறுக்கக்கூடிய ஒன்றாக அமையும். ஏனெனில் மத்தியப்பிரதேசத்தில் பாஜகவின் வெற்றி என்பது சிவராஜ்சிங் சௌகானின்
நேர்மையான ஆட்சிக்கு கிடைத்தப் பரிசு. இதற்கும் மோடி அலை என்று சொன்னால் சிவராஜ் சௌகானின் ஆட்சித்திறமையைக் குறைத்து மதிப்பிட்டதாக ஆகிவிடும். சத்தீஷ்கரில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்கு காங்கிரஸ் தலைவர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலை என்று சொல்லுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் பெற்றுள்ள இடங்கள் அதிகமாக நக்சலால் பாதிக்கப்பட்ட இடங்கள். இங்கு சட்டம் ஒழுங்கும், பழங்குடி மக்களுக்கு அதிக நன்மையும் சரிவர கிடைக்கப் பெற்றிருந்தால் அவர்கள் பாஜகவிற்குத்தானே ஆதரவளிப்பார்கள். தோல்வியை மறைக்க வேண்டுமானால் மேற்கண்ட வாதம் சரியாக இருக்குமே ஒழிய உண்மை அதுவல்ல. மக்களவைத் தேர்தலுக்குள் மாற்றங்கள் ஏற்பட்டால் மக்கள் மனங்களிலும் மாற்றம் ஏற்படும்.
       


        பாஜக மோடி அலை என்று கூறுவதன் பின்னணி என்ன? மோடியின் நிர்வாகத் திறன், மாநிலத்தின் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு நிலைமை எனும்போது அதுதானே மாநிலத்தேர்தல்களில் பிரதிபலிக்கும். தில்லி மக்களுக்கு பாஜகவின் மீது முழு நம்பிக்கை வரவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இங்கு சாமான்யனின் தேவை என்ன அதனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை அமைந்தால் அது அந்தக் கட்சி வெற்றி பெற வழிவகுக்கும்.
 இன்றைய முதல் தேவை, உணவு, இருப்பிடம், வேலைவாய்ப்பு போன்றவைதானே ஒழிய தேசப்பாதுகாப்பு, மதம், கோயில் இவைகளைப்பற்றி சாமான்ய மனிதன்நினைக்கப்போவதில்லை. அவனுக்குத் தேவையானதை கொடுத்தபின்பு மற்றவற்றைப் பேசினால் மனதில் நிற்கும். பசித்தவனுக்கு உணவுதான் வேண்டுமே ஒழிய கோமேதகமோ வைரமோ அல்ல.
        என்னுடைய ஆசை என்னவெனில் தில்லியில் பாஜகவும், ஏழை மக்கள் கட்சியும் கூட்டாட்சி அமைத்தால் மிக நன்றாக இருக்கும். ஊழலற்ற ஒரு நிர்வாகத்தை தர இது சாத்தியமாகுமா? அதனை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
        இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒன்று காங்கிரஸ் பாஜகவினை மதவாதக்கட்சி என்று தூற்றியதை மக்கள் புறக்கணித்துள்ளார்கள். அது மட்டுமல்ல காங்கிரசின் செக்யூலரிசம் என்ற வார்த்தை தோல்வி கண்டுள்ளது. அதற்குக்காரணம் பயன்படுத்துச் சொற்களுக்கும் உண்மை நிலைக்குமுள்ள வேறுபாடே என்று எண்ணுகின்றேன். இதனை பாஜக எப்படி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்போகிறது? இங்கு முகநூலில் பாஜக சார்பாக அதிகம் பதிவிடுபவர்கள் அதற்கு மதச்சாயம் பூசுவதில் மும்முரமாகச் செயல்படுகிறார்கள். இதனை எப்படி அதன் தலைவர்கள் கைக்கொள்ளப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தமிழகத்தில் இன்னும் தன் ஆதரவாளர்களை முழுவதுமாக சரிவரப்பயன்படுத்தாத பாஜக கூட்டணி விஷயத்தில் சறுக்கினால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை மறந்தவர்களாவார்கள்.
        இன்னும் ஏழை மக்கள் கட்சி தன் திட்டங்களை செயல்படுத்த நிறைய நேரமிருக்கிறது. அதற்கு தில்லியின் அளவு ஆதரவு இல்லையென்றாலும் ஓரளவு சாதிக்க முடியும் என்றே எண்ணுகின்றேன். மோடி அலை இவர்களைக் கரையேற்றுமா அல்லது இவர்கள் அதற்கு எதிராக கடலில் மூழ்குவார்களா பொறுத்திருந்து பார்ப்போம். யார் இறுதிப்போட்டியில் வெல்லப்போகிறார்கள்? மக்கள் வெல்ல வேண்டும் என்று விரும்புகின்றேன்.



சத்யமேவ ஜயதே ! வந்தே மாதரம் !