திங்கள், 13 ஏப்ரல், 2020


அன்பு நட்புகளுக்கு வணக்கம்

நிறைய பேர் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலை வெறுப்பார்களா இல்லையா என்ற ஒரு சந்தேகத்தில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் இதனை ஒரு சாபக்கேடாகவும் மக்கள் மிகுந்த துயர் படுவதாகவும் சிலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு சிலருக்கு மக்களிடையே பீதியைக் கிளப்புவதும், பிரச்சினை என்ற நெருப்பு அணைந்து விடாமல் காப்பதிலுமே நிறைய அக்கறை.

நான் தொலைத்தது என்ன, பெற்றது என்ன இந்த நாட்களில்.,
நட்புகளோடு அளவளாவ வெளியில் செல்ல இயலவில்லை.  அலைபேசி இதனை ஓரளவு தீர்த்து வைத்து விடுகிறது. மேலும் புத்தகங்கள் அந்த காலி இடத்தை நிறைவு செய்கின்றன.
எனது தொழில் தொடர்பாக திட்டமிட்டிருந்த வேலைகளைச் செய்ய இயலவில்லை. எல்லோருக்கும் இந்த நிலைமைதான், பெரிதாக ஒன்றும் குறையில்லை. இந்த நிலை மாறிய பின்பு ஈடு செய்து கொள்ளலாம்.

வானை மூடி நிற்கும் புகை மண்டலங்களைக் காண இயலவில்லை. மழைச் சாரலில் எனது பால்ய கால கிராம வாழ்க்கையில் கிடைத்த அனுபவம் இப்பொழுது ஏற்படுகிறது.

வாகனங்களின் இறைச்சல் குறைந்திருக்கிறது. அருகாமையில் தொடர்வண்டியின் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தது காணாமல் போய் இருக்கிறது. கிராமத்தின் அமைதி இன்றைய நகரத்தில்.

கருஞ்சிட்டு ஜோடி ஒன்று எங்கள் வீட்டுக் கிணற்றில் கூடு கட்டி இருந்ததைக் கவனிக்கவே இல்லை. ஊரடங்கிற்குப் பின்னர் வந்த நாளில் அதைக் கண்ணுற்றேன். கூட்டில் குஞ்சுகளில் சத்தம் கீச்கீச் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வாரம் கழிந்து காலை வாசற்படியில் ஒரு குஞ்சு அமர்ந்திருந்தது. காலை பத்துமணி வரை வேறெதுவும் செய்யாமல் இரு குஞ்சுகளையும் அதன் பெற்றோரையும் மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தேன். இரண்டு நாட்கள் மட்டுமே அவை குஞ்சுகளுடன் செலவிட்டன. பின்னர் குஞ்சுகள் எங்கு சென்றன எனத் தெரியவில்லை. ஜோடிக் குருவிகல் தங்கள் இருப்பிடத்தை மீண்டும் புதுப்பிக்கத் துவங்கிவிட்டன.

ஆறிப்போன சாதம் என்பதே இந்த ஊரடங்கு காலகட்டத்தில் இல்லை. இப்பொழுது சூடாகச் சமைத்து சாப்பிட முடிகிறது. இந்த ஒரு வாரம் மதிய உணவுப் பொறுப்பினை மகள் எடுத்துக் கொண்டு அன்னைக்கு ஓய்வு கொடுத்துள்ளாள். காலையில் எப்பொழுதும் இருக்கும் பரபரப்பு நோஓஓஓஓஓ. முக்கியமா என்னுடைய பாதிக்கு இருந்த பரபரப்பு சுத்தமா இல்லை.  

எனது இளமைக் காலம் ஒரு சினிமா பைத்தியமாக என்னை வைத்திருந்தது. பால்ய காலங்களில் கந்தன் கருணை, சம்பூர்ண ராமாயணம் போன்ற படங்களைத் தவிர்த்து வேறு எந்த சினிமாக்களுக்கும் அனுமதி இல்லை. அந்தக் கட்டுப்பாடு என்னை இப்படி ஆக்கியதோ என்னவோ. எனது மனைவிக்கோ சினிமாவே பிடிக்காது. திருமணமான புதிதில் ஒரே ஒரு சினிமாதான். வீட்டில் சிடி போட்டால் படம் ஆரம்பிப்பதற்குள் சத்தமில்லாமல் தூங்கிப் போயிருப்பாள். நண்பர்களுடந்தான் திரையரங்குகளுக்கு விஜயம், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னும் யாரும் என்னைக் கிண்டல் செய்யவில்லை.
இன்று அவளுக்குச் சினிமா பார்க்க வேண்டும், எனக்கோ அது பிடிக்காமல் போய் வெகு காலம் ஆகிவிட்டது. எப்பொழுதாவது குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களுக்காக மட்டும் செல்லும் வழக்கம். இப்பொழுது இந்த ஊரடங்கு நேரத்தில் சில தெலுங்குப் படங்களைக் காண்கிறோம். தமிழ்ப் படங்களைப் பார்ப்பதற்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு. தெலுங்குப் படங்களில் இன்னமும் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்களில் கம்யூனிசம், நாத்திகம், தமிழ்தேச நெடிகள் மட்டுமே அதிகமாக இருக்கிறது போல. திரௌபதி விதிவிலக்கு.

மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்கிறேன் தேவை ஏதாவது இருந்தால். மற்றபடி வெளியில் யாரும் செல்வதில்லை.
அமைதியாக நிம்மதியாக செல்லும் இந்தக் காலம் தொலைந்து போய் பரபரப்பான வாழ்க்கையை வாழாமல் செய்யும் காலம் திரும்பி விடப் போகிறதே என்ற அச்சம் எனக்கிருக்கிறது.  வாழ்க்கை முறையை வடிவமைத்துக் கொள்ள திட்டமிடுகிறேன். பார்ப்போம் என்ன நடக்கும் என்று.,.,