திங்கள், 29 ஜூலை, 2013

யாசகன்


என் கற்பனைக் காதலி என்னோடு பேசாமலிருந்தபொழுது.,

நீ விழையும் மௌனம்
உன் சந்தோஷ ஜன்னலின் சாவியென்றால்
என் இதய வலி மறைத்து
சம்மதமென்றே உரைத்திடுவேன்
சாதிக்கப் போவதென்ன
சத்தியமாய் விளங்கவில்லை எனக்கு
ஆத்மார்த்தமாய் வந்திட்ட உறவில் 
வாய்வார்த்தை தேவையில்லைதான்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஊடல் பேச்சில்லையெனில்
உறவின் விழைவும் விளங்காதல்லவா?
ஆறுமிங்கே ஆழியில் சங்கமிக்கையில்
ஆனந்த இரைச்சலிடுவதை அறிந்தவள்தானே நீ !
புள்ளினமும் மெல்லினமாய்
சத்தமிட்டு சாடுவதைக் கண்டவள்தானே !
சப்தங்கள் இங்கே நம் வாழக்கைச் சாரமாயிற்று
சங்கீதமாய் நம்மோடு இழைந்து போய்விட்டது
உன்னிலும் என்னிலும் மௌனத்திலும்
சபதங்கள் ஜீவித்துக் கொண்டுதானிருக்கின்றன
இதில் நீ மௌனம் என்று எதைத் தேடுகிறாய்?
என்றும் நீ சந்தோஷ சங்கீதமாய் வளைய வர
உன்னிடம் யாசிக்கின்றேன்
நீ ஏன் இன்னும் யோசிக்கின்றாய் ?
                                                                       - யாசகன்

இன்று இதனைப் பதியும்போது என்னை நான் திரும்பிப் பார்க்கும் ஒரு வாய்ப்பு. சப்தங்களை சங்கீதம் என்ற மனது இன்று சப்தங்களை வெறுப்பதேன். மாற்றங்கள் இவ்வளவு பெரிதாயிருக்குமா? இந்த மாற்றம் இயல்பானதாய் இருக்க வேண்டும். இந்த மாற்றமில்லாமல் ஒன்றிலேயே தொங்கிக் கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனமாய் போய்விடுமோ? சொல்ல இயலாது இன்னும் சில நாள்களில் சலசலக்கும் சண்டை சச்சரவுகளை என் மனது விரும்ப ஆரம்பித்து விடலாம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது இப்படியும் கூடத்தானே?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக