வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

பங்காளி

            குடும்ப அட்டை என்று தமிழில் கூறப்படும் ரேஷன் கார்டு பஞ்ச காலத்தில் வறியவர்களுக்காக உணவுப் பொருளை அளந்து அளவாகப் பகிர்ந்து கொடுக்க வழங்கப்பட்ட அடையாள அட்டை. அது இன்று அனைத்து குடும்பத்துக்கும் ஆதாரமான அட்டையாய் மாறிப்போய் ஆதார் அட்டை எதற்கு என்ற கேள்வி வேறு. அந்த அட்டை ஏழ்மையின் அடையாளம் என்பது முழுவதுமே காணாமல் போயிற்று. 

             சமூகத்தில் தாழ்த்தப்பட்டு முடங்கிக் கிடந்தோர்க்காக, மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டோர்க்காக அவர்களது அவலநிலை மாற வேண்டும் பொருளாதார நிலையில் உயர்ந்தால் அவர்களது தகுதியும் மாறிவிடும் என்ற எண்ணத்தில் இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. இந்த தாழ்நிலை ஆதிக்கத்தினாலும் அடக்குமுறையினாலும், ஒரு சில பிரிவினருக்கு ஏற்பட்டது. அவர்கள் என்றும் அந்த நிலையிலேயே இருந்திருப்பார்கள் என்று கூற இயலாது. அவர்களும் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் நல்ல நிலையில் இருந்திருக்க சாத்தியக்கூறுகள் உண்டு.

           ஆனால் நானும் தாழ்ந்தவன் என்று அவனைத் தாழ்த்திய சமூகங்களும் இடஒதுக்கீட்டை வெட்கமில்லாமல் பங்கு போட்டுக் கொண்டன. பங்கு போட்டுக்கொண்ட அனைவரும் பங்காளிகள்தானே. என்ன வேறுபாடு கண்டார்கள் இவர்கள் இன்னமும் மற்றவரை தாழ்ந்தவராய் நினைக்க.

           தாழ்த்தப்பட்டவர்களின் சொத்தைப் பங்க்கிட்டுக் கொள்ள ஒவ்வொரு சமூகமும் வெட்கமில்லாமல் பங்கு போடத்துவங்கியது இன்று மிகவும் ஆதிக்க சக்திகளாக விளங்கும் ஜாட் மற்றும் பட்டேல் சமூகங்களுக்கும் ஆசையைக் கிளப்பி விட்டது. அவர்களும் நாங்களும் உங்களில் ஒருவரே என்று பங்கு கேட்கிறார்கள். நல்லதுதானே சமத்துவம் வந்துவிடுமே; எல்லாருமே பிற்படுத்தப்பட்டவர் என்றால் அனைவரும் ஒன்று என்றாகிவிடுமே?

           இதில் தேவேந்திர குல வேளாளருக்கு மட்டும் என்ன ஆயிற்று? எங்கள் பரம்பரை மிகப் பெருமை வாய்ந்தது. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல;
எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம்; எங்களை உயர்ந்தவர்கள் என்று அறிவியுங்கள் என்கிறார்கள்.

           எனக்கு ஒவ்வொரு சமயத்திலும் என் மனதில் ஆழப்பதிந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது. சுனாமி தாண்டவமாடிய தருணம். ஆயிரம் கரங்கள் கடற்கரை கிராமங்களை நேசத்தோடு உதவி புரிய நீண்டன. அங்கு பாதிக்கப்பட்ட மீனவ இனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட இன்னலைக் கண்டு, இழந்த சொந்தங்களை எண்ணி வேதனையோடு இருந்தன. உதவி புரிய வந்த கரங்களில் இருந்த பொருள்கள் அவர்களை ஈர்க்கவில்லை. தன்மானம் கொண்ட அவர்களது கரங்கள் தாழ்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட பொருள்களை ஏந்த மிகுந்த தயக்கம் காட்டின. ஆனால் அதே நேரத்தில் குவிந்த பொருட்களை அள்ளிச் செல்ல ஒரு கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. மிக அலட்டலோடு பொருள்களை கேட்டு வாங்கிக் கொண்டது.

            தாழ்ந்து கிடக்கும் சமுதாயம் 60 ஆண்டு கால வாழ்க்கையில் முழுவதுமாக பொருளாதார சுதந்திரமும் பெறவில்லை; சமூக அந்தஸ்தும் பெறவில்லை. ஆனால் சமூகத்தில் உயர்ந்து கிடந்த சமூகங்கள் இடஒதுக்கீட்டிற்காகத் தங்களைத் தாழ்த்திக் கொண்டன. இதில் எங்கு ஓட்டை உள்ளது. ஏன் மறுபரிசீலனை என்ற ஒன்று இவ்விஷயத்தில் நடை பெறவேயில்லை என்ற கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை.
இன்னாருக்குப் பிறந்த இன்னார் இன்ன சாதிதான் என்று அரசு பட்டியலிடுவது வழக்கம். இப்படி பட்டியலிட்டால்தான் இட ஒதுக்கீடு என்ற ஒன்றை அளிக்க இயலும். ஒரு வரையறையை இப்படி வகுத்துவிட்ட பிறகு சாதியை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டால் சாதி எப்படி ஒழியும்? விளங்கவில்லையே!


            சமூகத்தில் மாற்றம் வலிந்து திணிப்பதனால் என்றும் ஏற்படாது. அது இயல்பாக மாறிப் போக வேண்டும். அப்படி ஒரு வழிமுறை முன்வருமா? வந்தால் அதனை  ஏற்க முன்வருவரா என்பதும் ஐயப்பாடே! காலம் மாறும் என்று காத்திருப்போம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக