புதன், 19 மார்ச், 2014

பெரியசாமி ஐயாவும், சாமிநாதனும் 3

பெரியசாமி ஐயாவும், சாமிநாதனும் 3

ஐயா, உங்கள் நண்பரின் மகன் இப்போது எப்படி உள்ளார்?

தம்பீ, நான் என் நண்பரிடம் பேசிய பின்பு, அவர் தனது மகனோடு அமைதியாக உட்கார்ந்து அளவளாவத் தொடங்கினார். தற்சமயம் புலம்பல்கள் குறைந்து, அமைதியாக யோசிக்கவும், தந்தையுடன் தனது தொழிலைப் பற்றி விவாதிக்கவும் துவங்கியுள்ளார். கூடிய விரைவில் தனது தொழிலைத் திறம்பட நடத்திச் செல்வார் என்று என் நண்பருக்கு நம்பிக்கை கூடியுள்ளது.

மிகவும் சந்தோஷமாக உள்ளது ஐயா.

எனக்கு ஒரு சந்தேகம்!

சொல்லுங்கள் ஐயா.

ஒருவன் ஒரு தெய்வத்தை வழிபட்டுக் கொண்டு வருகின்றான். அவனுக்கு நிறைய பிரச்சினைகள். எதற்கும் சரியான தீர்வு கிடைக்காமல் தவித்து வருகின்றான். இந்தச் சூழ்நிலையில் அவனுக்கு இன்னொரு தெய்வத்தைப் பற்றி ஒருவர் கூறுகிறார். உடனே இவன் இதுநாள் வரை தான் தொழுது வந்த தெய்வத்தை புறக்கணித்து வேறு ஒரு தெய்வத்தை தொழ ஆரம்பிக்கின்றான். இது சரியா? பல தெய்வங்கள் என்ற கூற்றும் சரியா?

முதலில் உங்களது இரண்டாவது கேள்விக்கு விடையிறுக்க முயல்கின்றேன். உண்மையில் கடவுள் என்பவர் ஒருவரே. பேராற்றல் கொண்ட இறை சக்தி என்பது ஒன்றே. நாம் அறிவியல் பாடத்தில் படித்திருப்போம். ஆற்றல் என்பது ஆக்கவும் அழிக்கவும் இயலாதது. அது ஒரு ஆற்றலிலிருந்து மற்றொரு ஆற்றலாக மாறும். இது ஒரு சுழற்சியாக அமைந்திருக்குமே தவிர ஆற்றல் எப்பொழுதும் அழிவதில்லை.

அப்படியே இறைப் பேராற்றல் பல சக்திகளாகவும், தத்துவங்களாகவும் தன்னைப் பிரித்துக் கொண்டு இந்த உலகத்தை இயக்கி வருகின்றது. ஒரு பேராற்றலே இப்படி பல சக்திகளாகவும், தத்துவங்களாகவும் இயங்கி வருவதை உணர்ந்த நம் முன்னோர், பேராற்றலை பரபிரம்மம் என்றும், அதை உணர்ந்து கொள்வதை பிரம்மஞானம் என்றும் கூறினர். பல்வேறாக பிரிந்துபட்டு காணப்படும் சக்திகளுக்கு, வெவ்வேறான வடிவங்களை வடித்தனர். ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்தமான சக்திகளையும், தத்துவங்களையும் வழிபடலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு வழிமுறையிலும் வழிபாடு என்பது முடிவில் எல்லையில்லா அந்த பிரம்ம ஞானத்தை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டது. எப்படி அறிவியலின் மூலம் நாம் அறியும் பல்வேறு ஆற்றல்கள் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ இல்லையோ, அப்படியே இந்த பல்வேறு தெய்வ வழிபாட்டு முறைகளிலும் உயர்வு தாழ்வு என்ற பேதமில்லை.

ஆயின் இங்கு ஒருவன் பிரம்மஞானத்தை அடைய வேண்டுமெனில் ஏதாவது ஒரு பாதையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன் பொருட்டு தான் வழிபடும் தெய்வத்தை மாற்ற வேண்டாமென்றும், ஒரு தெய்வ வழிபாடே உயர்ந்ததென்றும் கூறி வந்துள்ளனர் பெரியோர். இல்லையெனில் ஒருவன் தான் கற்றுக் கொண்ட பல்வகை வழிபாடுகளிலும் மனதைச் செலுத்த முற்படும்போது மன ஒருமுகப்பாடில்லாமல், தன் இலக்கை அடையாமல் போக நேரிடும்.
இறை சக்தியின் பல்வேறு வடிவங்களும், தத்துவங்களும் ஒன்றே போல எனவும், அவைகளுக்குள் பேதமில்லை எனும்போது ஒரு தெய்வத்தை வணங்குவதால் பலனில்லை எனவும், மற்றொரு தெய்வம் சக்தி வாய்ந்தது எனவும் சொல்வது மிகவும் முட்டாள்தனமானது. தன் முன்னோர் பின்பற்றிய, நன்குணர்ந்து வழிகாட்டப்பட்ட பாதையில் செல்வதே மிகவும் உத்தமமானது.

சில பேர் இந்த கோயிலுக்குப் போவதை விட அந்த கோயிலுக்குச் செல்லுங்கள். அந்த அம்மன் சக்தி வாய்ந்தது என்று பேசுவார்கள். ஒரு தெய்வம் சக்தி வாய்ந்தது என்றும், மற்றொன்று சக்தியற்றது என்றும் பேசுவது எவ்வளவு முட்டாள்தனமானது.

ஒருவனது பிரச்சினைகள் தீரவில்லை எனும்போது, நான் வழிபடும் தெய்வம் எனக்கு உதவவில்லை. அதனால் மாற்று தெய்வத்தை நாடிச் செல்கிறேன் என்பதும் முட்டாள்தனமானதே. நாம் ஒரு தெய்வத்தை வணங்கி, அந்த தத்துவ வழிபாட்டில் முழு ஈடுபாட்டோடு வாழ்ந்து வருகையில் அந்த தெய்வ சக்தியோடு நம்முள் உறைகின்ற சக்தி இணைந்து ஒன்றாக இயங்க ஆரம்பிக்கும். அவ்வாறு நடந்த பின்பு நம்மை அது வழி நடத்திச் செல்ல ஆரம்பிக்கும். இந்த நிலை முழுமை அடைவதற்கு முன்பான காலகட்டத்தில் நமது மனது முழுவதுமாக அந்த வழிகாட்டுதலைப் பயன்படுத்தத் துவங்குவதற்கு முன்பு மனதின் தன்னிச்சையான ஆசைகளும், விருப்பங்களும் தலை தூக்க ஆரம்பிக்கும். அப்பொழுது நம்மை வழிகாட்ட விரும்பும் சக்தி நமக்கு நல்லதை மட்டுமே தர நினைத்து நம்முடைய தேவையற்ற ஆசைகளையும், விருப்பங்களையும் தடுத்து நம்மை மாற்று வழியில் செலுத்த முற்படும். இந்த காலகட்டத்தில் நாம் நமது விருப்பங்கள் பூர்த்தியாகவில்லை என்று முட்டாள்தனமாக வழிபாட்டைத் துறந்தோமானால் நம்முடைய நலனை நாம் துறக்கிறோம் என்றாகிறது.

எத்தனை நாள்தான் தம்பி பொறுமையோடு இருப்பது?

நிச்சயம் ஒவ்வொரு செயலுக்கும், அதற்கான விளைவுக்கும் ஒரு கால அளவு தேவை. அதை நிர்ணயிப்பது எல்லாம் வல்ல பேராற்றல்.
ஒருவனிடம் ஒரு சாது ஒரு முட்டையைக் கொடுத்து, அப்பா நீ இதை அடைக்காக்கும் தன்மைக்கு ஏற்ப வெப்பம் ஏற்பட வகை செய்து பாதுகாத்து வா. உனது வாழ்க்கையை உயர்த்த வேண்டிய ஒரு விஷயத்தை இதன் மூலமாக உனக்கு இறைவன் அருளிச் செய்வார் என்றார். அவன் முட்டையை சாது சொன்னது போல, அடைகாக்க ஏற்பாடு செய்தான். ஒரு வாரம் சென்றது, என்னடா இது முட்டையை வைத்து ஒரு வாரம் ஆயிற்றே, என்ன ஆனது பார்க்கலாம் என்று அடைகாக்கும் இடத்திலிருந்து எடுத்துப் பார்த்தான். அதில் எந்த மாற்றமும் தெரியாமலிருக்கவே மீண்டும் அப்படியே வைத்துவிட்டு வந்துவிட்டான். இப்படி பலமுறை அவன் பொறுமையிழந்து முட்டையை மீண்டும் மீண்டும் எடுத்துப் பார்க்க அதற்கு தொடர்ச்சியாக வெப்பம் கிடைக்காமல் அது வீணாய் போனது. சாது அடைகாக்க ஏற்பாடு செய், உனக்கான நல்லது ஒன்று கிடைக்கும் என்று சொன்ன பின்னர் நம்பிக்கையோடு தன் செயலைச் செய்து முடித்து விட்டு பொறுமையோடு இருந்திருந்தானென்றால் அவனுக்கு நிச்சயம் அந்த நல்ல விஷயம் கைகூடியிருக்கும். அவனது பொறுமையற்ற தன்மை அவனுக்கு நன்மை கிடைக்காமல் தடுத்து விட்டது. எனவே ஒவ்வொரு விஷயத்துக்கும் பொறுமை மிகவும் அவசியம்.

தம்பீ இப்படி ஒரே பேராற்றல்தான் உள்ளது, அதற்கு ஏதாவது ஒரு வழிபாடு செய்யலாம் எனும்போது; வீட்டிலிருந்தே செய்யலாம் அல்லவா? கோயில் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற நிலை தேவையா?

ஐயா, பேராற்றல் பிரபஞ்சம் முழுமையும் தன் ஆற்றலை பரப்பி இருக்கிறது. அதை நாம் உணர முடியாத நிலைமையிலேயே இருக்கிறோம். ஒரு வானொலி அலைவரிசையில் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றது. அது இந்த வானவெளியிலே மிதந்து கொண்டிருக்கின்றது. எந்த வானொலிப்பெட்டியில் அந்த குறிப்பிட்ட அலைவரிசைக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கிறதோ அங்கு பாடல் கேட்கப்படுகிறது. அதுபோல எவனொருவனது மனது ஏதாவது ஒரு தெய்வத்துடைய வழிபாட்டைத் தொடர்ச்சியாக செய்து வரும்போது அந்த தெய்வத்தோட அலைவரிசையுடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியும். இது சாதாரண மனிதர்கள் அனைவருக்கும் சாத்தியமான ஒன்றென்றாலும் காலச் சூழ்நிலையில் பொருளீட்ட அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இதனைச் சாத்தியப்படுத்துவது எப்படி, என்று யோசித்த நமது முன்னோர் மனித உடலைப் போன்றே வடிவமைக்கப்பட்ட ஆலயங்களை அமைத்து, அங்கு தெய்வத்தின் சக்தியை பிரபஞ்சத்திலிருந்து ஈர்க்கும் வகையாக செய்தனர். அவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயங்களில் அந்த சக்தியின் அதிர்வலைகள் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். அங்கு செல்லும் நாம் அமைதியாக அதனை உணர முற்படுகையில் அந்த அதிர்வலைகள் நமக்குள்ளே சக்தியை பரப்பும். அவ்வாறு ஏற்பட்டபின் நமது மனது ஒரு அமைதி நிலைக்குத் திரும்புகிறது.

சரி, அப்படியானால் கோயிலுக்குச் சென்று கோரிக்கை வைக்கிறார்களே, அந்த கோரிக்கைகள் நிறைவேறுவதாகச் சொல்கிறார்களே? ஆனால் நீ வெறும் மன அமைதிதான் கோயிலில் ஏற்படுகிறது என்று சொல்கிறாயே?

நான் ஏற்கனவே பலமுறை உங்களிடம் கூறியபடி மனம் அமைதியுற்றிருக்கும்போது மட்டுமே, தன்னைச் சுற்றி நடப்பதை சரியான முறையில் அறிந்து கொள்ள அதனால் இயலும். அதனடிப்படையில் அமைதியடைந்த மனம் தனது விருப்பத்தை பூர்த்தி செய்யத் தேவையானவற்றை சரிவர உணர்ந்து கொண்டு செயல்பட விருப்பங்கள் நிறைவேறுகின்றன.

அப்படியெனில் கடவுள் எதையும் செய்யவில்லைதானே?

இந்தக் கேள்வியினை எதிர்பார்த்தே சென்ற கேள்விக்கான பதிலை நான் முழுமையாகச் சொல்லவில்லை. எந்த கோயிலுக்குச் சென்றாரோ அந்த சக்தியுடனேயான ஒரு இணைப்பினை நமது மனது பெற்றுக் கொள்கிறது. பின்னர் அமைதியடைந்த மனதுக்கு வழிகாட்டுகிறது. நீங்கள் அவதார் என்ற ஆங்கிலப் படம் பார்த்திருப்பீர்கள். அதில் அந்த மனிதர்கள் ஒரு குதிரையில் ஏறிச்செல்ல முற்படும்பொழுது அதனுடலுடன் தங்கள் உடலை இணைத்துக் கொள்வார்கள். ஏறக்குறைய அது போலத்தான் இங்கு ஏற்படும் இணைப்பும், ஆனால் இது வெளியில் தெரியாது. அந்த தெய்வ சக்தியே வழிநடத்துகின்றது. இதுவுமே முழுமையாக நடக்கவில்லை. எனவே அடிக்கடி கோயிலுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

ஏன் எல்லாம் தெரிந்த அந்த கடவுள் தன்னை முழுமையாக கோயிலுக்கு வரும் அந்த பக்தனோடு இணைத்துக் கொள்ளக்கூடாது?

நீங்கள் சிறியதாக இருக்கும் எல்.ஈ.டி விளக்கைப் பார்த்திருப்பீர்கள். அதனை இயக்க மின்சக்தி தேவைப்படுகின்றது. வீட்டில் இருக்கும் பெரிய அளவிலான விளக்கினை இயக்கவும் மின்சக்தியே தேவைப்படுகின்றது. நாம் என்ன செய்கின்றோம்? சிறிய அளவிலான விளக்கிற்கு பேட்டரியையும், பெரிய விளக்கிற்கு வீட்டிலுள்ள ப்ளக்கிலிருந்தும் மின்சக்தியினை எடுக்கிறோம். ஏன்? ப்ளக்கிலிருந்து சிறிய விளக்கிற்கு மின்சக்தியை செலுத்தினோமானால் அது எரிந்து போய்விடும். ஏனெனில் அந்த சக்தியை தாங்கக்கூடிய அளவில் செய்யப்படவில்லை. அதுபோலவே மனிதர்களும் அந்த தெய்வ சக்தியை முழுதுமாக தாங்கக் கூடிய அளவில் இல்லை. எனவே கோயிலிலிருந்து சிறிய அளவில் சக்தியைப் பெற்றுக் கொள்கிறோம். உபாசனை செய்து தன் தாங்கும் சக்தியைப் பெருக்கிக் கொண்டவர்கள் இன்னும் பெரிய அளவில் இறை சக்தியோடு இணைகிறார்கள்; வீட்டிலிருக்கும் பெரிய அளவிலான விளக்குகளைப் போல. மகான்கள் டிரான்ஸ்பார்மர்களைப் போல.

இன்னும் ஒரு கேள்வி; கருணை மிகுந்தவர் கடவுள் என்கையில், மனிதனுக்கு வர இருக்கும் பிரச்சினைகளை முன்கூட்டியே தீர்த்து வைத்தால் என்ன?

மனிதன், பேராற்றலின் ஒரு துளிதான். அவனுக்கு வரும் பிரச்சினைகள் எல்லாம் அவனது முற்செயலின் விளைவுகள்தானே தவிர வேறல்ல. அப்படி இருக்கையில் அதை அவனே எதிர்கொண்டு தீர்ப்பதே சரியென்பதாலும், அதற்கான சக்தி அவனுக்களிக்கப்பட்டிருப்பதாலும் இறைவன் இதைச் செய்வதில்லை. மேலும் கருணை கொண்ட இறைவன் பிரச்சினைகள் தீர்ப்பதற்கான வழிமுறைகளை அவன் அறியுமாறே வைத்துள்ளார். அதை அறிந்து கொள்ள முயலாமல் இருப்பது யாருடைய பிழை.
  
மேலும், இங்கு மனிதன் முழுதுமாக இறைவனைச் சரணடைவதுமில்லை, தான் என்ற அகங்காரத்திலே உழன்று கொண்டிருக்கையில் இப்படி கடவுளே பிரச்சினையைத் தீர்ப்பது என்பது எப்படி சரியாகும். இது இன்று ஆசிரியர்கள் கேள்விகளுக்கான விடைகளை மாணவர்களைத் தயார் செய்யச் சொல்லாமல் தாங்களே விடைகளைக் கொடுப்பது போலத்தானே ஆகும். அதனால் அம்மாணவர்கள் சுயமாக சிந்திக்கும் திறனற்று, தன் காலில் நிற்காமல் சார்ந்து நின்று செயல்படும் தன்மைக்குத் தள்ளப்படுகிறார்கள்

தன்னுடைய படைப்பு சுயபலம் உணர்ந்து, தன் காலில் சுயமாய் நின்று பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதாலும், தன் கருணையைச் சரிவர பயன்படுத்துகின்றார் இறைவன்.

சரி தம்பீ, மிகச் சரியாகச் சொல்லியிருக்கின்றாய். இன்னும் சில கேள்விகள் மனதிலே ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. அவைகளை மற்றொரு சந்திப்பின்போது கேட்கிறேன்.

சரி ஐயா. எப்பொழுதும் உங்கள் கேள்விகளுக்கு என் மனம் அளிக்கும் பதிலைத் தருகிறேன் ஐயா.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக