வியாழன், 21 மார்ச், 2013

எம் தமிழ் சொந்தங்கள்


ஈழத்தமிழர் பிரச்சினை.

நான் எதிர்பார்த்தது போலவே மாணவர்களின் போராட்டத்தின் வாயிலாக, மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டி தஙகள் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி பெற்றிருப்பவர்கள் யார்? இங்கு என்ன மாதிரியான சிந்தனைகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.  இது சரிதானா?

இங்கு முன்வைக்கப்பட வேண்டியவை எவை?

1.  இந்திய அரசால், தமிழக அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, இருப்பிடம், உணவு,  மருத்துவ வசதி ஆகிய விஷயங்களில் உடனடியாக கவனம் செலுத்தப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.

2. உடனடியாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவது நிறுத்தப்படவேண்டும்.

3. மேற்கண்ட விஷயங்களில் ஐ.நா மேற்பார்வையிட அனுமதித்தல்

4. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நியாயமான விசாரணை ஐ.நாவால் நடத்தப்பட இந்தியா இலங்கையை சம்மதிக்க வைத்தல் வேண்டும்

5. ஆசியப் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டுமெனில் இந்தியா சில உறுதியான முடிவுகளை நட்போடு எடுத்தேயாக வேண்டும். ஒரு நட்பு நாட்டை பகை நாடாக அறிவிப்பது என்பது தீர்வாகாது. அதே நேரத்தில் நட்பு நாடு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டாமல் அமைதி காப்பதும் சரியான தீர்வல்ல.

அனைத்து எதிர்கட்சிகளும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வேண்டாம் என்றிருக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய நம் பிரதிநிதிகள் சொல்வதை நம்புவோம். சரி இப்பிரச்சினைக்கு மாற்றான தீர்வு என்று ஒரு முடிவினை எடுத்திருந்தால் அவர்கள் மீது நாம் நம்ம்பிக்கை வைக்கலாம். தீர்வை நோக்கி செல்ல அவர்கள் கூடியது போன்று தெரியவில்லை. யாரையோ சமாதானப்படுத்த அல்லது நாங்களும் ஏதோ செய்து கொண்டுதானே இருக்கிறோம் என்பதாக மக்களை நம்பவைக்க கூடியது போன்றதொரு தோற்றத்தினையே தற்போது நான் காண்கிறேன்.

இப்பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு என்றொரு கோரிக்கை வந்துள்ளது, தமிழீழம் அமைய வேண்டும் என்றொரு கோரிக்கையும் வந்துள்ளது. இவ்விரண்டும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையா அல்லது புலிகளின் கோரிக்கையா அல்லது நம் மாணவர்களின் கோரிக்கையா?

ஏன் இந்த கேள்வியை நான் முன்வைக்கிறேனென்றால் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக தற்போது யார் செயல்படுகிறார்கள்? அவர்கள் ஏதும் இவ்வாறான கோரிக்கையினை வைத்திருக்கிறார்களா? எனக்கு இதைப்பற்றித் தெரியாததனாலேயே இக்கேள்வி.

ஆனால் இந்த கோரிக்கையின் பின்னணியில் தனித்தமிழக ஆதரவாளர்கள் இருந்திருந்தால்,மாணவர்கள் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கும் வேளையில் அவர்கள் அறியாமலே இது திணிக்கப்பட்டிருக்கிறதா?

இங்கு தேசிய சிந்தனை, இந்திய ஒற்றுமை பற்றி வாய் கிழிய பேசுபவர்களும் கூட சிலர் தமிழீழம் என்றும், புலிகள் என்றும் பிதற்றுகிறார்கள். ஈழத்தமிழ் வரலாற்றில் புலிகளின் பங்களிப்பை யாரும் மறைத்துவிட முடியாது, கூடவும் கூடாது. ஆனால் அந்தக் கொடியை தாங்கிப்பிடிக்க வேண்டியதன் அவசியம் என்ன. ராஜபக்ஷேவுக்கு புலிகள் அழியவில்லை எங்கள் உருவத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லி உசுப்பேத்தவா?

இந்தியாவிற்கு இறையாண்மை என்று ஒன்று இருக்கிறதென்றால் உலக நாடுகள் அனைத்துக்கும் அது பொதுவானதுதானே? இந்தியா உடையக்கூடாது ஆனால் இலங்கை உடைய வேண்டும் என்றால் அது சரியானதுதானா? எனக்குப்புரியவில்லை. இப்படி உடைத்துக் கொண்டுபோன, நாம் உடைத்துப் பிரித்த பாகிஸ்தான், பங்களாதேஷின் இன்றைய நிலை என்ன? அதனால் நமக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் என்ன?

உடைத்துப் பிரித்தல் மேற்கத்திய சிந்தனை, சேர்த்துப் பார்த்தல் இந்திய சிந்தனை. எது நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இலங்கை சிதறுண்டு அங்கு மேலும் பகைநாட்டினர் கூடாரம் கொண்டு வடக்கே சீனா, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே பங்களாதேஷ், தெற்கே புதிதாக இலங்கை ஒன்று எதிரியாக வேண்டும் என்பதா நம் நிலைப்பாடு.

தனித்தமிழீழத்தினைவிட தன்னாட்சி உரிமை கொண்ட தமிழர் தலைமையிலான தமிழ் மாநில அரசு அமைய வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. என் எதிர்பார்ப்பென்ன இறுதி முடிவா? இதனை முடிவு செய்ய வேண்டியது ஈழச் சகோதரர்கள்தானே, என்னைவிட அந்நிலத்தினை முழுதுமாய் அறிந்தவர்கள் அவர்கள்தானே? நான் சொல்வது இந்தியாவிற்கும் ஈழத்திற்குமான பாதுகாப்பான ஒரு நல்லுறவு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன்.

நம் குழந்தை உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலோ, ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ நமது உடனடி கவனம் அதனை மருத்துவமனையில் சேர்த்து தகுந்த சிகிச்சை அளித்து நல்லபடியாக வீட்டிற்கு அழைத்து வருவதில்தானே இருக்கும்.

அதனைத் தவிர்த்து விபத்து நடந்த இடத்தில் அமர்ந்து வாகனங்களை தடை செய்யவோ, சாலை பாதுகாப்பு விதிகளை அமுல்படுத்தக் கோரியோ போராடிக் கொண்டிருக்க மாட்டோம். நம் குழந்தைசரியான பிறகு மீண்டும் அது போல் நிகழாதிருக்க என்ன செய்ய வேண்டும் என சிந்தித்து செயல்படுத்த முனைவோம்.

அதுபோல இன்றைய நிலையில் உடனடியாக ஈழத்தமிழனுக்கு, நம் தொப்பூழ்க் கொடி உறவுக்கு என்ன தேவை எனபதனை அறிந்து முதலில் அதனை அல்லவா தீர்க்க வேண்டும், மத்திய அரசை அதற்கல்லவா வலியுறுத்த வேண்டும்.

அதனைத் தவிர்த்து ஓநாய் அமெரிக்கனுக்கு பின்னால், அவன் கொண்டு வரும் உப்புச் சப்பில்லாத தீர்மானத்தினை ஆதரிக்கக் கோரி போராட்டம் நடத்துவதில் என்ன பயன். அவனுக்கு இலங்கையில் இராணுவத்தளம் கிடைக்கவில்லை, அதற்கு இலங்கையை மிரட்ட ஓர் ஆயுதம் எடுத்துள்ளான். மனிதாபிமானம் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது. தாலிபான்களை ருஷ்யாவிற்கு எதிராக வளர்த்து இன்று ஆப்கானிஸ்தான் ஒரு தாழ்நிலையிலிருக்க அவர்களின் ஆதிக்க வெறிதானே காரணம். ஈராக் போரில் என்ன மனிதாபிமானத்தோடு செயல்பட்டார்களா? ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது. ஆட்டுக்கு புரிந்திருக்கும், ஆட்டின் தோழனுக்கு?

ஈழத்தமிழனுக்கு தாய்நாடு ஸ்ரீலங்காதான், அங்கு அவன் உரிமையுடன் வாழும் நிலை அமைய வேண்டும். முதல் விஷயமாக இந்தியா செய்யவேண்டியது

முள்கம்பிகளுக்கு பின்னால் வாழும் தமிழர்களை அவர்களின் சொந்த ஊரில் குடியமர்த்த இல்ங்கையை வலியுறுத்துவது.

ராணுவத்தைக் குறைத்து தமிழர்களுக்குள்ள பயத்தினை நீக்க வலியுறுத்துவது. முற்றிலுமாக ராணுவத்தினை நீக்குவதற்கு இலங்கை அரசு உடன்படாது, மீண்டும் புலிகளின் ஆதிக்கம் உருவாகிவிடுமோ என்ற தயக்கம் இலங்கை அரசுக்கு இருக்கும். இல்லையென்றாலும் நம் தமிழக அரசியல்வாதிகள் உருவாக்குவார்கள்.

உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது.

முதலில் இந்த கோரிக்கைகள் நிறைவேறினாலே ஈழத்தமிழர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்களே. பின்னர் படிப்படியாக அவர்களின் உரிமையை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்குவதி இந்திய அரசு உறுதி செய்யலாமே?

இந்திய அரசை இதற்கு வலியுறுத்த வேண்டும். இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சியிடம் அதை எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. எதிர்கட்சிகள் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இதனைக் கையாள வேண்டும். ஏற்கனவே மத்திய அரசின் ஒருதலைபட்சமான அணுகுமுறையே தமிழர்களின் உணர்வு பொங்குவதற்கு காரணமாக இருக்கலாம்.

ஈழத்தமிழர்கள் விரும்புவது போராட்டங்களையோ அல்லது போர்களையோ அல்ல. அமைதியை. அந்த அமைதி அங்கு ஏற்பட இந்திய தமிழ்ச் சமூகம் உதவி புரிய வேண்டும். முக்கியமாக இந்திய அரசு இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.

ஈழத்திலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கின்ற எம் நட்புகளும் அதனையே விரும்புகிறார்கள் என நம்புகின்றேன்.

என் நெஞ்சில் கொடுமைகளின் வேதனை மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.எனது வேண்டுதல்களெல்லாம் மீதமிருக்கும் ஈழத்தமிழர்களாவது உயிருடன், நலமுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே.

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக